ஷவர்மா சாப்பிட பயமா? வாந்தி, பேதி வந்துவிட்டால் உடனே என்ன செய்யனும்? டாக்டர் பரூக் அப்துல்லா டிப்ஸ்
சென்னை: ஏதேனும் உணவு சாப்பிட்டதும் வாந்தி பேதி வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சிவகங்கை மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பதிவில்: ஷவர்மா சாப்பிட்டு மாணவி பலி பிரியாணி சாப்பிட்டு இளம்பெண் பலி இப்படியெல்லாம் செய்திகள் வரும் போது நிச்சயம் இதைப் படிக்கும் பொது மக்களுக்கு ஷவர்மா ஏதோ உயிரைக் கொல்லும் விசயம் போன்றும் பிரியாணி சாப்பிட்டாலே பிரச்சனை தான் என்பது போலும் ஒரு எண்ணத்தை பொது புத்தியில் இந்த செய்திகள் விதைக்கின்றன.
ஆனால் இந்த உணவுப் பதார்த்தங்கள் மீதோ அதன் செய்முறை மீதோ அதில் சேர்க்கப்படும் சேர்மானங்கள் மீதோ எந்த பிரச்சனையும் இருப்பதில்லை. மாறாக மனிதர்கள் நாம் கொண்டிருக்கும் அதீத பேராசை காரணமாக ஒரு நாள் மிஞ்சும் சமைக்கப்பட்ட உணவை அப்படியே அடுத்த நாளைக்கு கொண்டு சென்று விற்க நினைக்கும் சில மனிதர்களால் தான் இந்த உணவுப் பட்சணங்கள் கெட்ட பெயரை வாங்குகின்றன.

மாமிசம்
அதிலும் மாமிசம் சேர்த்து சமைக்கப்படும் உணவுகளை அன்றன்றே சாப்பிடும் போது எந்த பிரச்சனையும் இல்லை.
மாறாக அவற்றை அடுத்த நாள் கொண்டு செல்லும் போது நோய் கிருமிகள் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதிலும் மாமிசத்தை முறையாகப் பேண வேண்டிய குளிர் நிலையில் பேணாமல் போனால் ஆபத்தான கிருமிகள் தொற்றும் வாய்ப்பு உண்டு.

கோடை காலத்தில் மின் தடை
தற்போது கோடை காலத்தில் மின் தடை ஏற்படுவதால் நம்மால் கூட நமது குளிர்சாதனப் பெட்டியின் குளிர் நிலையை சரிவர பராமரிப்பது கடினமாகி விடும். எனவே நாம் உண்ணும் உணவை நன்றாக சமைத்து உண்ண வேண்டும். அதிலும் மாமிசம் சேர்க்கப்பட்ட உணவுகள் நன்றாக சமைக்கப்பட வேண்டும்.

குளிர்
சேமித்து வைக்க வேண்டும் என்றால் முறையான குளிரில் பராமரிக்க வேண்டும். கடைகளில் வாங்கி உண்ண வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் நல்ல தரமான உணவை தயார் செய்து விற்கும் கடைகளில் கொஞ்சம் பணம் அதிகம் செலவானாலும் பரவாயில்லை என்று வாங்கி உண்ண வேண்டும்.

உண்ணும் இடத்தின் தரம்
உண்ணும் கடைகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கலாகாது. ஒரு இடத்தில் தவறு நேர்ந்து விட்டதால் அனைவரையும் தவறானவர்களாக நினைத்து விட முடியாது. அதே சமயம் நாம் உணவு உண்ணும் இடத்தின் தரத்தை சிறிதாவது ஆய்வு செய்து உண்ண வேண்டியது நமது கடமை.

உணவு செய்யப்பட்ட விதம்
உணவு செய்யப்பட்ட விதம், அதை பராமரித்த விதம் போன்றவற்றில் ஏற்படும் கோளாறுகளால் இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. மாறாக ஷவர்மா மற்றும் பிரியாணி போன்ற உணவுப் பொருட்கள் மீது எந்த பிரச்சனையுமில்லை. உணவினால் ஏற்படும் நோய் உண்டாகுமானால் சுய மருத்துவம் செய்து காலம் தாழ்த்தாமல் மருத்துவ உதவியை நாடுவது உயிரைக் காக்கும்.

வாந்தி பேதி
வாந்தி பேதி போன்றவை ஏற்பட்டால் கால தாமதம் செய்யாமல் சிகிச்சை பெறுவது அவசியம். தீவிர பாக்டீரியா தொற்று ஏற்படுமாயின் அதற்குண்டான ஆண்டிபயாடிக் மருந்துகளை உடனே வழங்கிடுவது அவசியம். கூடவே அதீத நீரிழப்பையும் தாது உப்புகளின் மாறுபாட்டையும் சரி செய்ய ரத்த நாளம் வழி திரவங்கள் ஏற்றுவதும் அவசியம்.
Recommended Video

டாக்டர் அட்வைஸ்
இயன்றவரை வீட்டில் சமைத்து உண்போம் வெளியில் உணவு உண்ணும் இடத்தைத் தேர்ந்தெடுத்து உண்போம். உணவினால் ஏற்படும் தொற்றுகளுக்கு உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுப்போம் என டாக்டர் அ.ப. ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர்
சிவகங்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications