ஆசை காட்டும் விஜய் "நேரடி அரசியலில் வாய்ப்பு".. 6 சீட்டு வந்தால்.. முதல்வர் சீட்டு தானாக வரும்!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநிலத்தை தாண்டி நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. யாரும் எதிர்பார்க்காத வகையில், புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தனது முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கிறார் விஜய்.
ஆனால் இந்த வெற்றி தவெக-விற்கு முழுமையானதாக கிடைக்கவில்லை என்பதால் ஆட்சியை அமைக்க தேவையான பெரும்பான்மைக்காக சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் முயற்சிகள் திமுக, அதிமுக-விற்கு அடுத்தடுத்து பெரும் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.

6 எம்எல்ஏ ஆதரவு தேவை
தமிழக சட்டமன்றத்தில் மொத்தம் 234 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சியை அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகிறது. இந்நிலையில், தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி திமுக-வின் 20 ஆண்டு கூட்டணியில் இருந்து விலகி தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு விஜய்க்கு கிடைத்துள்ளது. மேலும், தவெக கட்சித் தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், அவற்றில் ஒன்றை ராஜினாமா செய்ய உள்ளார்.
இதன் மூலம் தவெகவிற்கு இன்னும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற வேண்டிய அவசியத்தில் உள்ளது. இந்த 6 இடங்களே தற்போது ஆட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.
விசிக மற்றும் இடதுசாரிகள்
தற்போது தவெக, திமுக கூட்டணியில் நீண்ட காலமாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த மூன்று கட்சிகளும் தலா 2 எம்எல்ஏக்கள் வைத்துள்ளதால், மொத்தம் 6 உறுப்பினர்களின் ஆதரவை வழங்கும் நிலை உள்ளது.
இந்த ஆதரவு கிடைத்தால், தவெக தலைமையிலான கூட்டணி 119 உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை எளிதில் எட்டும். இதனால் விஜய் எந்த தடையும் இன்றி நாளை முதலமைச்சராக பதவியேற்கும் வாய்ப்பு உருவாகும்.
நேரடி அரசியலில் வாய்ப்பு
இந்த சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றிப்பெற்றுள்ளது மூலம், தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது. தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக திராவிடக் கட்சிகள் மட்டுமே அமைச்சரவை அமைத்த நிலையில், இம்முறை காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கும் தவெக உடனான கூட்டணியில் சேர்ந்தால் அமைச்சரவைப் பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதனால் இந்த 4 கட்சிகளும் தவெக உடன் இணைய ஆர்வம் காட்டி வருகிறது. மேலும் இவை அனைத்தும் திமுக உடன் கூட்டணியில் இருந்தவை. இன்று காலை முதல் அதிமுக கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் தவெக-வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மாலையில் முடிந்த ஆலோசனை கூட்டத்தில் ஆதரவு இல்லை என அறிவிக்கப்பட்டது.
விசிக ஆலோசனை கூட்டம்
இந்த சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தவெக அரசுக்கு ஆதரவு வழங்கலாமா வேண்டாமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சித் தலைவர் திருமாவளவன் இதுகுறித்து தெரிவித்ததாவது, விஜய் ஆதரவு கோரி கடிதம் அனுப்பியுள்ளதாகவும், ஆனால் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார். கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும், இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாடும் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.















Click it and Unblock the Notifications