வாக்களார் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? திருத்தம் மாற்றம் செய்யனுமா? 9 ஆம் தேதி வரைவு பட்டியல்!
சென்னை: தமிழகத்தில் நவம்பர் மாதம் 9-ம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெளியிடப்படும் என்றும், இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி வெளியிடப்படும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் நடைபெறுவது வழக்கம். இந்தப் பணிகள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற்று வருகிறது.
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் நிறைவடைந்ததும், ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

வரைவு வாக்காளர் பட்டியல்
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், நவம்பர் மாதம் 9-ம் தேதி, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெளியிடப்படும்.

டிசம்பர் 8 வரை பணிகள்
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான அன்றைய தினத்தில் இருந்து டிசம்பர் மாதம் 8-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார். வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகளின்போது, வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் முகவரி, பெயரில் எழுத்துப் பிழை உள்ளிட்டவற்றை திருத்தம் செய்து கொள்ளலாம்.

17 வயது நிரம்பியவர்கள்
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கையும் நடைபெறவுள்ளது. இதில் 17 வயது நிரம்பிய அனைவரும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம். மேலும், தங்களுடைய வாக்காளர் அட்டையுடன், ஆதார் இணைக்கும் பணிகளையும் மேற்கொள்ளலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சனி, ஞாயிறு சிறப்பு முகாம்
பணிகள் நடைபெறும் இந்த ஒரு மாத காலத்தில், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களும் நடைபெறவுள்ளன. இந்த முகாம்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும். மேலும், சிறப்பு முகாம்களுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, இறுதி வாக்காளர் பட்டியல், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி வெளியிடப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications