இதெல்லாம் அதிசயம் ஆனால், உண்மை! சமூக நீதிக்கான சரித்திர நாயகர் ஸ்டாலின்.. கி.வீரமணி புகழாரம்!
சென்னை: நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 'சமூக நீதிக்கான சரித்திர நாயகர்' என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாராட்டியுள்ளார். எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 'நீட்' என்னும் நுழைவு தேர்வை ஆண்டுதோறும் மத்திய அரசு நடத்தி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 'நீட்' தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்த பாதிப்புகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தங்களது ஆய்வு அறிக்கையை முதல்வரிடம் சமர்பித்தது. இதில் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை விரும்பவில்லை என்பது தெரியவந்தது.
நீட் விவாதம்: கல்வி உரிமையை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும்: வேல்முருகன் எம்.எல்.ஏ.
மீண்டும் நீட் விலக்கு மசோதா
மேலும், தமிழக சட்டசபையில் நீட் விலக்கு தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்ட்டது. இந்த மசோதா தமிழக ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை சபாநாயகருக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். நீட் தேர்வு மாணவர்களுக்கு எதிரானது அல்ல என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். இதனை தொடர்ந்து தமிழக சட்டசபையில் நேற்று நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது.
எல்லையற்ற மகிழ்ச்சி
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆறே நாட்களில் புயல் வேகத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றி உள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்ட நடவடிக்கைகளை நேரலையில் கண்டு எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.
வரலாற்றுக் குறிப்பாகும்
சமூகநீதி, பெண்ணுரிமை, ஒடுக்கப்பட்டோரின் கல்வி உரிமை, மாநில உரிமை, மக்களாட்சி உரிமை போன்ற பல தத்துவ விளக்கங்களை உள்ளடக்கியதாக முதல்வரின் உரையும், ஒருமித்த கருத்துகளை வழங்கிய மாண்பமை சட்டமன்ற கட்சித் தலைவர்களின் உரைகளும் அமைந்து, ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்ட வரைவினை மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநருக்கே திருப்பி அனுப்பியது வரலாற்றுக் குறிப்பாகும்.
சமூக நீதிக்கான சரித்திர நாயகர்
திராவிடர் இயக்கம் - நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர்களும், பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும் மறையவில்லை; வாழ்பவர்களே என்பதன் அடையாளம் இது! நம் கொள்கை லட்சியங்களாக தமிழ்நாட்டினர் நெஞ்சங்களில் உறைந்தனர் நிறைந்தனர் என்பதை நமது முதல்வர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் என்ற வகையில் ஸ்டாலினின் உரை தெளிவாகப் பிரதிபலித்தது.
அதிசயம் ஆனால், உண்மை!
மறுமுறை காலந்தாழ்த்தாமல் புயல் வேகத்தில் சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டமன்ற சிறப்புக் கூட்டம்... இவற்றை ஆறே நாள்களில் கூட்டி நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பியது அதிசயம் ஆனால், உண்மை! என்று வியக்கும் வண்ணம் வேக நடவடிக்கைகளாக நடந்தன.
திராவிட மாடல் ஆட்சி
சமூகநீதி, மாநில உரிமைக் கொள்கைகளை மீண்டும் பாய்ச்சலோடு வேகமெடுக்கச் செய்தமைக்கு ஆளுநரின் அரசமைப்புச் சட்ட மீறிய செயல் தூண்டுதலாய் அமைந்துள்ளது. மக்களாட்சி முறையோடும், மாண்போடும் உரிமைக் குரல் எழுப்பி, உறவுக்குக் கை கொடுக்கும் உயர் மனிதர்கள் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்பது அகிலத்திற்கும் அறிவிக்கப்பட்டதை வரவேற்கிறோம் பாராட்டுகிறோம். இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.