"திராவிடம் ஒரு இனமே இல்லை" ஆங்கிலேயர்கள் சொன்னது தவறு.. மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு பேச்சு!
சென்னை: இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்கள் சென்ற பின்னரும் திராவிட இனம் என்று பின்பற்றி வருவது தவறு என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர் - மாநில அரசு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அண்மைக் காலமாக கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், டெல்லி, புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநருக்கு எதிராக அந்தந்த மாநில அரசு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
இதேபோல் தமிழ்நாட்டில் திமுக vs ஆளுநர் ஆர்என் ரவி இடையிலான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் சனாதனம், திராவிடம், திருக்குறள், திருவள்ளுவர், கலாச்சாரம், தமிழ், பண்பாடு உள்ளிட்டவை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வருகிறார்.

ஆளுநர் vs திமுக
இதுமட்டுமல்லாமல் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் தமிழக அரசு மீது ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாக குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்பி-க்கள் சார்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக்கோரி ஜனாதிபதியிடம் கடிதம் அளிக்கப்பட்டது.

பழங்குடியின பெருமை தினவிழா
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் திராவிடம் பற்றி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆளுநர் மாளிகையில் பழங்குடியின பெருமை தின விழாவை நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பழங்குடியின தலைவரான பிர்சா முண்டா உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

திராவிடம் பற்றி மீண்டும் பேச்சு
இதனைத் தொடர்ந்து மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அப்போது ஆர்.என்.ரவி பேசுகையில், திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர் குறிப்பிட்டது தவறு. விந்திய மலைக்கு தெற்கே இருப்பது பஞ்ச திராவிட பகுதி, வடபகுதி பஞ்ச ஆரிய பகுதி என்பதே பண்டைய வரலாறு. வடபகுதியில் இருப்பவர் தெற்கே வருவதும், தெற்கில் இருப்பவர் வடபகுதிக்கு செல்வதும் நீண்ட காலமாக இருந்து வந்தது. அதேபோல் ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின்னரும் திராவிட இனம் என்று பின்பற்றி வருவது தவறு என தெரிவித்தார்.

பழங்குடியின இடஒதுக்கீடு
தொடர்ந்து பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு பற்றி பேசுகையில், பழங்குடியின மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இரு விதமான இடஒதுக்கீட்டை வழங்குகின்றன. மாநிலத்தை பொறுத்த வரை மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 8 கோடி மக்கள் இருக்கும் தமிழ்நாட்டில் பழங்குடியினர் 8 லட்சம் பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு மாநில அரசு 1% இட ஒதுக்கீடு வழங்குகிறது. இது குறைவாக உள்ளது. இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications