யார் அந்த “ரோலக்ஸ்?” போதை பொருளின் “ஹப்” குஜராத்.. கடத்தலுக்கு காரணம் மத்திய அரசு - பொன்முடி அதிரடி
சென்னை: குஜராத்தில் இயங்கி வரும் முந்த்ரா என்ற தனியார் துறைமுகம்தான் என்றும், போதைப் பொருள் கடத்தலுக்கு காரணமே மத்திய அரசுதான் எனவும் தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டி இருக்கிறார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "போதைப் பொருட்கள் வெளிநாட்டில் இருந்துதான் இங்கே இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது அது பலமடங்கு அதிகரித்து இருப்பதற்கு காரணம் தனியாவசம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிற துறைமுகங்கள்தான்.
அவைகளின் மூலமாகவே இந்த கடத்தல் வேகமாக நடைபெறுகிறது. அதுவும் குறிப்பாக குஜராத்தில் இருக்கிற முந்த்ரா துறைமுகம்தான் இதில் நம்பர் ஒன். அங்குதான் அதிகமாக கடத்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஆப்கானிலிருந்து கடத்தல்
பல்வேறு மாநிலங்களிலிலிருந்து, பல்வேறு நாடுகளில் இருந்து வரும் அவைகள் வருகின்றன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் மூலமாக கொண்டு வரப்பட்ட இந்த போதைப் பொருட்களை எல்லாம் இன்னும் முழுமையாக தடை செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். துறைமுகங்களை தனியார்மயமாக்கியதால் வளர்ந்துள்ள இவற்றை தடை செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று எல்லா எதிர்க்கட்சிகளும் எடுத்துக் கூறினார்.

மத்திய அரசு மீது புகார்
ஆனால், அவற்றை முழுமையாக எடுத்துக்கொண்டு மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதனால்தான் தமிழகத்திலேயே இதுபோன்றவைகள் எல்லாம் வளர்ந்து இருக்கின்றன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் விஜயவாடா துறைமுகத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு அதிகம் போதைப் பொருட்கள் வருகின்றன. அங்கும் இதுபோல் அதிகம் நடக்கின்றன.

விஜயவாடா - குஜராத் லிங்க்
விஜயவாடாவிலிருந்து சென்னை துறைமுகம் பக்கத்தில் இருக்கிறது. ஆனால், விஜயவாடா துறைமுகத்துக்கும் குஜராத் முந்த்ரா துறைமுகத்துக்கும் தொடர்பு இருக்கிறது. அதன் மூலமாக வெளிநாடுகளில் இருந்து பல்வேறு கடத்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இவைகளை எல்லாம் தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் பலமுறை சுட்டுக்காட்டி இருக்கிறார்.

முதலமைச்சர் நடவடிக்கை
இது ஒரு மாநிலத்துக்கு உட்பட்ட விசயம் அல்ல. பல்வேறு மாநிலங்களும் சேர்ந்து செய்ய வேண்டியது. தமிழ்நாட்டில் இவைகள் எல்லாம் உற்பத்தி செய்யப்படுவது இல்லை. ஆனால், பல மாநிலங்கள் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து இங்கு வந்து விற்கிறார்கள். அதை கட்டுப்படுத்தவே தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

குஜராத் நீதிபதி
குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தின் அதிகாரிகள் மூலமாக இது நடைபெறுகிறதா? மற்றவர்களின் மூலமாக கடத்தல் நடைபெறுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று குஜராத்தை சேர்ந்த மாவட்ட நீதிபதி பவார் உத்தரவிட்டு உள்ளார். போதைப் பொருள் கடத்தலை தடுக்க வெளிநாடுகளில் பின்பற்றும் முறையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி அறிவுறுத்தி இருக்கிறார்.

நடவடிக்கை அவசியம்
இவ்வளவு நடந்த பிறகும் மத்திய அரசு இதை தடுக்க முழுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய கோரிக்கை. யார் யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டு உள்ளார்கள் என்பதை கண்டறிந்து இந்திய அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் தமிழ்நாட்டில் ஒழுங்கான நிலையை உருவாக்க முடியும். எனவே தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசு துறைமுகங்களை தனியாருக்கு விடக்கூடாது என்ற கோரிக்கைகளை வலுயுறுத்தி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications