தொடர் கனமழை.. தமிழகத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்தெந்த 28 மாவட்டங்கள் தெரியுமா? விபரம்
சென்னை: தமிழ்நாட்டில் கனமழை பெய்து வரும் நிலையில் மாநிலத்தில் 28 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் மிதமானது முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழை இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தான் காரணமாகும்.

ஆழ்ந்த காற்றழுத்து தாழ்வு பகுதி
அதாவது வங்கக் கடலின் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி இருந்தது. இது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இது தென்மேற்கு வங்க கடல், வட இலங்கை பகுதிகளில் நிலை கொண்டிருக்கிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களுக்கு மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் கனமழை
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியான அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம்- புதுவை கடற்கரையை நோக்கி நகரக் கூடும். இதன்பின்னர் உள் மாவட்டங்களினூடாக தமிழகம், கேரளா பகுதிகளை கடந்து அரபிக் கடல் நோக்கி இந்த காற்றழுத்த தாழ்வு நிலை செல்லும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

பள்ளி-கல்லூரி விடுமுறை
இதனால் இன்று முதல் அடுத்த சில நாட்கள் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சில இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய உள்ளது. இதற்கிடையே தான் கனமழையின் காரணமாக தமிழ்நாட்டில் 28 மாவட்ட பள்ளி -கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்துக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் மழையில் நனையாமல் பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை
அதன்படி நவம்பர் 12ம் தேதியான(சனிக்கிழமை) இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருச்சி, மயிலாடுதுறை, தேனி, திருப்பத்தூர், கோயம்புத்தூர், திருவாரூர், கன்னியாகுமரி, அரியலூர், நீலகிரி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருவண்ணாமலை, சிவகங்கை, மதுரை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications