அதிக இடதுகை பேட்ஸ்மேன்கள்.. "அப்போ அவர்தான் தேவை".. தென் ஆப்பிரிக்கா போட்டியிலும் சாஹல் தவிர்ப்பு?
சென்னை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றையப் போட்டியிலும் இந்திய அணியில் சாஹல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே பார்க்கப்படுகிறது.
டி20 உலகக்கோப்பைத் தொடரின் முக்கியமான போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் பெர்த் மைதானத்தில் மோதுகின்றன. இந்த உலகக்கோப்பைத் தொடரில் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
குறிப்பாக பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை ஜிம்பாப்வே அணி வீழ்த்தியது இதே பெர்த் மைதானத்தில் என்பதால், இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கடைசி பாலை விடுங்க.. அதுக்கு முன்பே உறுதியான பாகிஸ்தான் தோல்வி! பங்காளிகள் வீழ்ந்தது எங்கு தெரியுமா?
இந்தியா - தென்னாப்பிரிக்கா
இந்தப் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் - தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்களுக்கு இடையிலான போட்டி என்று பார்க்கப்படுகிறது. ஆனால் தென்னாப்பிரிக்கா அணியில் டீ காக், ரூஸ்ஸோ, மார்க்ரம், கில்லர் மில்லர் என்று அசாத்திய பேட்ஸ்மேன்களும் இருப்பதால், சமபலம் வாய்ந்த அணியாக இருக்கிறது.
டி காக், ரூஸ்ஸோ
குறிப்பாக டி காக் மற்றும் ரூஸ்ஸோ ஆகியோர் பேட்டை சுழற்றினாலே நிச்சயம் பவுண்டரி தான் என்று நிலையில் ஆடி வருகின்றனர். இந்திய அணியில் ஷமியை தவிர்த்து, மற்ற அனைவரும் மித வேக பந்துவீச்சாளர்கள் தான். தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்த வேண்டுமென்றால், இவர்கள் இருவரையும் எவ்வளவு வேகமாக வீழ்த்த முடியுமோ, அவ்வளவு வேகமாக வீழ்த்த வேண்டும்.
அஸ்வின் ஏன் தேவை?
ஏற்கனவே இந்திய அணிக்கு எதிரான தொடரில், ரூஸ்ஸோ சதம் விளாசி இருப்பதால், இன்றையப் போட்டியில் இவரை கட்டுப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது. இதனால் இடதுகை பந்துவீச்சாளர்களுக்கு சிறப்பாக பந்துவீசும் அஸ்வின் நிச்சயம் இடம்பெறுவார் என்றே கணிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, ஒவ்வொரு அணிக்கு ஏற்றவாறு அணித் தேர்வு இருக்கும் என்று கூறி இருந்தார். இதனால் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு வலதுகை சுழற்பந்துவீச்சாளர்களே சரியாக இருப்பார்கள்.
சாஹல் தவிர்க்கப்படுவது ஏன்?
ஐபிஎல் தொடரின் போது டெல்லி அணியில் அதிகமாக இடதுகை பேட்ஸ்மேன்கள் இருந்தபோது, மும்பை அணியில் ராகுல் சஹரை நீக்கிவிட்டு, அவருக்கு பதில் ஜெயந்த் யாதவை ரோஹித் ஷர்மா அணியில் சேர்த்திருப்பார். அதே பாணியை இன்றையப் போட்டியிலும் ரோஹித் ஷர்மா எடுக்கக் கூடும் என்பதால், இன்றையப் போட்டியில் சாஹல் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அஸ்வினின் செயல்பாடுகள் உலகத்திற்கே தெரிந்தது என்பதால், பவர் ப்ளே ஓவர்களின் போதே அஸ்வினை பயன்படுத்த அதிக வாய்ப்புகள் இருக்கிறது.