அதிகரிக்கும் கொரோனா.. உடனே களமிறங்கிய அரசு.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு.. தடுப்பு பணிகள் விறுவிறு
சென்னை: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் தினமும் 20,000-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு என கொரோனா தொடர்ந்து உச்சத்தில் இருக்கிறது. இதேபோல் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் தொற்று அதிகரித்து வருகிறது.
இந்த பட்டியலில் நமது தமிழகமும் விதிவிலக்கல்ல. தமிழ்நாட்டிலும் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.தமிழ்நாட்டில் கடந்த வியாழக்கிழமை 1,859 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் அதாவது வெள்ளிக்கிழமை 1,947 பாதிப்புகள் பதிவாகி தொற்று அதிகரித்துள்ளது. நேற்று 1,986 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு மீண்டும் அதிகரித்துள்ளது.
இளைஞர்களை அதிமுகவுக்கு ஈர்க்க என்ன வழி..? அதிரடி மாற்றங்களை அரங்கேற்ற விரும்பும் இ.பி.எஸ்..!
அதிகரிக்கும் கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் 3-வது அலையை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அரசு தற்போது முன்கூட்டியே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கை 9-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் கூடுதல் தளர்வுகள் ஏதும் அறிவிக்கிக்கவில்லை. மேலும் மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதல்வர் அதிரடி உத்தரவு
'தமிழ்நாட்டில் எந்த கடைகளிலும், இடங்களிலும் மக்கள் கூடினால் அந்த கடைகளை மூடும் பொறுப்பை
மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் எடுத்துக் கொள்ளலாம்' என்ற உத்தரவுதான் இது. முதல்வரின் இந்த உத்தரவை முதலில் கடைபிடிக்க தொடங்கியது சென்னை மாநகராட்சிதான். சென்னையில் மக்கள் அதிகம் கூடும் தியாகராய நகர் உள்ளிட்ட 9 இடங்களில் மால்கள், கடைகள் திறக்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மெரினா கடற்கரை மூடல்
மேலும், மெரினா கடற்கரை உள்ளிட்ட முக்கியமான கடற்கரை பகுதிகளில் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி மாதம் என்பதால் கோவில்களில் கூட்டம் கூடும் என்பதை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் முக்கியமான சுமார் 1,000 கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கோவில்களில் பக்தர்கள் அனுமதி இல்லை
சென்னையில் உள்ள மயிலாப்பூர் கோவில், வடபழனி கோவில், தஞ்சாவூர் பெரிய கோவில், மதுரை மீனட்சி அம்மன் கோவில், ஸ்ரீரங்கம் கோவில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி முருகன் கோவில் உள்ளிட்ட முக்கியமான கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. இதேபோல் காவிரி, தாமிபரணி போன்ற முக்கியமான நீர்நிலைகளில் பக்தர்கள் கூடுவதற்கும் அதிரடியாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கோவையில் அதிக கட்டுப்பாடுகள்
இது தவிர தமிழ்நாட்டில் தொற்று அதிகம் உள்ள கோவையில் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோவை மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை செய்ய மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. உணவங்கள் மாலை 5 மட்டுமே செயல்படும். இதற்கு மேல் பார்சல் மட்டும் வழங்கப்படும். முக்கிய சாலைகள்,வணிக பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் செயல்பட ஞாயிற்றுக்கிழமைகளில் தடை விதிக்கப்ட்டுள்ளது.
பலரும் வரவேற்பு
நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவி வருவதால் ஆகஸ்டு 5-ம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் பல்வேறு மாவட்ட நிர்வாகங்ககளும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தேவைக்கேற்ப நடவடிக்கை எடுத்து வருகின்றன. கொரோனா பரவலை மேலும் தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு முன்கூட்டியே நடவடிக்கை மேற்கொண்டு வருவதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.