“சாய்பாபா” காலில் விழுந்து.. மகள் செந்தாமரையுடன் மயிலாப்பூர் கோயிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு
சென்னை: மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அவரது மகள் செந்தமாரை ஆகியோர் சிறப்பு வழிபாடு செய்தனர்.
சாய்பாபாவின் 104 வது சமாதி தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இதனை ஒட்டி பல்வேறு சாய்பாபா கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
அந்த வகையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரசித்திபெற்ற சாய்பாபா கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள் சாய்பாபா கோயிலுக்கு வந்து வழிபட்டு சென்றனர்.
மதத்தை வைத்து பிழைப்பு..என் பேச்சை வெட்டி..ஒட்டி..திரித்து வெளியிடுவார்கள்..முதல்வர் ஸ்டாலின்
துர்கா ஸ்டாலின் வழிபாடு
இந்த கோயிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் அடிக்கடி வந்து வழிபட்டு செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் சாய்பாபாவின் 104 வது சமாதி தினத்தை முன்னிட்டு இன்று மயிலாப்பூர் சாய்பாபா கோயிலுக்கு துர்கா ஸ்டாலினும் வருகை தந்து சிறப்பு வழிபாடு செய்தார்.
மகள் செந்தாமரை
சாய்பாபா கோயிலை சுற்றி வந்த துர்கா ஸ்டாலின், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த சாய்பாபா சிலைக்கு மாலை அணிவித்தார். அதன் பின்னர் சிலையின் காலில் விழுந்து அவர் வேண்டினார். துர்கா ஸ்டாலினுடன் அவரது மகள் செந்தாமரையும் சாய்பாபா கோயிலுக்கு வருகை தந்தார்.
கடவுள் நம்பிக்கை
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும், அவர்களின் வீட்டில் உள்ள பெண்களின் கடவுள் நம்பிக்கையில் தலையிடுவது கிடையாது. தீவிர கடவுள் நம்பிக்கை கொண்டவரான துர்கா ஸ்டாலின் கோயில்களுக்கு சென்று வழிபடும் புகைப்படங்கள் அடிக்கடி வெளியாவது வழக்கம்.
குலதெய்வ கோயில்
இதேபோல் கடந்த செப்டம்பர் மாதம், மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை துர்கா ஸ்டாலின், கொடியசைத்து தொடங்கி வைத்தார். தனது தந்தை வழி குலதெய்வ கோயிலான இங்கு, துர்கா ஸ்டாலின் உதவியுடன் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது.
குடும்பத்துடன் வழிபாடு
இந்த கோயிலுக்கு, புதிதாக கொடிமரம், விநாயகர், ராகு, கேது ஆகியவையும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதில் முதலமைச்சரின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், மைத்துனர் டாக்டர் ராஜமூர்த்தி, நடிகர் சந்திரசேகர், அமைச்சர் மெய்யநாதன், எம்.எல்.ஏக்கள் பூம்புகார் நிவேதா முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.