விமான நிலையத்தில் கூடிய பஞ்சாயத்து! இபிஎஸ்-ஐ தட்டிக் கொடுத்த மோடி! ஓபிஎஸ் உடன் தனியே நடத்திய ஆலோசனை!
சென்னை : பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சில நிமிடங்கள் தனித்தனியே சந்தித்து பேசியதாகவும் அப்போது தமிழக அரசியல் தொடர்பாக பல்வேறு விவகாரங்கள் குறித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக நேற்று சென்னை வந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பிலும், பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த பிரம்மாண்ட விழாவில் மத்திய, மாநில அரசுத் துறைகளின் சார்பில் ரூ.31,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணித்தார்.
இலங்கைக்கு ரூ.123 கோடி மதிப்பில் உதவிய தமிழ்நாடு அரசு... உரையில் குறிப்பிடாமல் தவிர்த்த பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி
முன்னதாக சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை தமிழக அமைச்சர்கள் துரைமுருகன் பொன்முடி ஆகியோரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அரசு அதிகாரிகள் முறைப்படி வரவேற்றனர். அமைச்சர்கள் வரவேற்றதை தொடர்ந்து மூன்றாவதாக நின்ற எடப்பாடி பழனிச்சாமியின் கையை பிடித்து நலம் விசாரித்த பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து அவர் முதுகில் தட்டிக் கொடுத்து அவரது கையை இறுகப் பிடித்துக் கொண்டார்.
எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு
பின்னர் நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் டெல்லி செல்லும் போது தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அவரை சந்தித்தனர். அப்போது தமிழ்நாட்டுக்காக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய ஒரு மனுவினை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினர்.
கோரிக்கை மனு
அந்த மனுவில் காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், உயர்ந்து வரும் நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும், சென்னை சேலம் இடையே விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அதிமுகவில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகள், திமுக ஆட்சியில் இருக்கும் சில பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓ பன்னீர்செல்வம் பேச்சு
எடப்பாடி பழனிச்சாமி உடனான சந்திப்புக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை தனியாக சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் பிரதமர் தனித்தனியாக சந்தித்து பேசியதாகவும் அப்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர் என கூறப்படுகிறது. அதிமுகவில் ஆதிக்கம் செலுத்தும் கொங்கு லாபி, தனக்கு எதிராக நடக்கும் சில சர்ச்சைகள் குறித்தும், குறிப்பாக கட்சிக்கும் வெளியில் இருக்கும் 'சிலர்' குறித்தும் பிரதமருடனான சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.