இதுவேற லெவல் அரசியல்.. அடுத்தடுத்து மத்திய அரசுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் எடப்பாடி.. பின்னணி
சென்னை: கல்வி உள்ளிட்ட மாநில உரிமை விவகாரத்தில் மத்திய அரசை, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு கடுமையாக எதிர்க்க தொடங்கி உள்ளது. என்ன தான் தேர்தல் கூட்டணி என்றாலும் இதை கல்வி உரிமையை மொத்தமாக விட்டுக்கொடுக்க எடப்பாடி அரசு துளியும் தயாராக இல்லை என்பதே அண்மைக்கால சம்பவங்கள் காட்டுகின்றன.'
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தேசிய அளவில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த தீவிரமாக பணியாற்றி வருகிறது. மும்மொழி கட்டாயம், இந்தியை நாடு முழுவதும் பயிற்றுவிக்க திட்டம், கல்லூரிகளில் சேர நுழைவுத்தேர்வு, 5ம் வகுப்பில் இருந்தே நுழைவுத் தேர்வு, படிப்புடன் தொழிற்கல்வி, உயர்கல்வி தேர்வு வாரியம் என அதன் தேசிய கல்விக்கொள்கை மிக மீண்டது.
மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையில் பல்வேறு அம்சங்கள் மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாக உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த கொள்கையை தமிழகம் ஆதரிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை. அதேநேரம் மும்மொழி கொள்கை, மறைமுகமாக இந்தி திணிப்பு உள்ளிட்டவற்றை அதிமுக ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறது.
ஆராய அமைத்த குழு
அதேநேரம் புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு குறித்து அம்சங்களை தமிழக அரசு முழுமையாக ஆராய்ந்து வருகின்றன. முதன்மை செயலர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட குழு பரிசீலனை செய்து வருகிறது. இந்தகுழு ஆய்வு அறிக்கை அளிக்க உள்ளது, அதன் அடிப்படையில் தமிழக அரசு புதிய கல்வி கொள்கை விவாரத்தில் முடிவெடுக்கும் என தெரிகிறது.
தமிழக அரசு எதிர்ப்பு
இது ஒருபுறம் எனில் மத்திய அரசு. நாடு முழுவதும் எம்பிபிஎஸ் படிக்க ஒரே நுழைவுத் தேர்வாக நீட் தேர்வை கொண்டுவந்துள்ளது ஏழை , கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் என்று அதிமுக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த விவகாரத்தில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி எடப்பாடி தலைமயிலான அதிமுகஅரசு அனுப்பி வைத்தது. ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது. இதனால் நீட் தேர்வின் படி தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்ச்கை நடந்து வருகிறது.
எடப்பாடி அரசு அதிரடி
இந்நிலையில் இந்த நீட் நுழைவுத்தேர்வால் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களின் மருத்துவ கனவு கானல் நீராகிவிட்டதை உணர்ந்த தமிழக அரசு, நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு. 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அளித்து சட்டம் கொண்டுவந்துள்ளது. இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அண்மையில் அதிமுக மூத்த அமைச்சர்கள் நேரில் சென்று விரைவில் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினர். இதேபோல் அரசு பள்ளி மாணவர்களுக்கு. 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரை மருத்துவ கலந்தாய்வை நடத்த முடியாது என்று எடப்படி அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால், ஏழை மாணவர்கள் 300 பேருக்குமேல் இந்த முறை டாக்டர் ஆக முடியும். இது அதிமுக அரசுக்கு மிகப்பெரிய வெற்றியாகும்.
எதிர்க்கட்சியும் கைகோர்ப்பு
இதேபோல் அண்மையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என்றும் தமிழக அரசு அறிவித்தது. உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் வெளியிட்ட இந்த அறிவிப்பை எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலினே வரவேற்றார். மாநில உரிமைகளுக்கு அதிமுகவுடன் இணைந்து திமுக போராட தயார் என்றும் அண்மையில் கூறினார்.
தமிழக அரசு எதிர்ப்பு
இந்நிலையில் திடீர் திருப்பமாக புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பிற படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு தமிழக உயர்கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில் பிளஸ் 2 முடித்து எந்த ஒரு கல்லூரி படிப்பைத் தேர்வு செய்வதற்கும் தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற புதிய கல்வி கொள்கையின் பரிந்துரையை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது சரியான பரிந்துரை அல்ல என்றும் எனவே இந்த அம்சத்தை புதிய கல்வி கொள்கையின் இருந்தே நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது எடப்பாடி அரசு. கல்வி விவகாரத்தில் அடுத்தடுத்து மாநில உரிமைக்காக மத்திய அரசுடன் மல்லுக்கட்ட தொடங்கியருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கண்ட மோதலில் வெற்றி பெற்றால் நிச்சயம் தேர்தலில் அதிமுகவுக்கு அது பெரிதும் கைகொடுக்கும் என்பதே எதார்த்தம்.