இளைஞர்களை அதிமுகவுக்கு ஈர்க்க என்ன வழி..? அதிரடி மாற்றங்களை அரங்கேற்ற விரும்பும் இ.பி.எஸ்..!
சென்னை: இளைஞர்களையும், இளம்பெண்களையும் அதிமுகவை நோக்கி ஈர்க்கும் வகையில் கட்சியில் சில அதிரடி மாற்றங்களை செய்யவிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இதேபோல் மகளிர் அணியையும் வலிமைப்படுத்தி புதியவர்களுக்கு பொறுப்பு கொடுக்கும் திட்டமும் கைவசம் உள்ளது.
இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.சுடன் ஆலோசனை நடத்தி விரைவில் சில புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
அதிமுக
அதிமுகவை பொறுத்தவரை மகளிர் அணியும், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையும் தான் அக்கட்சியின் சார்பு அணிகளில் பிரதானமானவை. இதற்கு அடுத்தபடியாக தான் அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். மன்றம், மீனவர் அணி, விவசாய அணி, என பல பிரிவுகள் வருகின்றன. ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அதிமுகவில் மகளிர் அணியும், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையும் மிகவும் வலிமை வாய்ந்ததாக திகழ்ந்தன.
இளைஞர் பாசறை
அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் இருந்த பலரும் இன்று அரசு ஊழியர்களாக கூட இருக்கின்றனர். எல்லாமே ஜெயலலிதாவின் நேரடி கருணையினால் கிடைத்த பணி. இதனால் புதிது புதிதாக இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர். இது எல்லாமே 2016-ம் ஆண்டுக்கு முந்தைய 2011-2016 அதிமுக ஆட்சியில். 2016 டிசம்பருக்கு பிறகு காட்சிகள் எல்லாம் மாறத்தொடங்கியதுமே அதிமுகவின் சார்பு அணிகள் அனைத்தும் சரியத் தொடங்கின.
பனிப்போர்
அதிமுக மேலிடத்தில் நடக்கும் பனிப்போரை பொறுக்க முடியாத இளைஞர்கள் பலர் நாம் தமிழர் கட்சியிலும், மக்கள் நீதி மய்யத்திலும், சிலர் திமுகவிலும் இணையத் தொடங்கினர். குறிப்பாக விஜிலா சத்யானந்த், கோவை விஷ்ணுபிரபு, உள்ளிட்ட இன்னும் சில முக்கிய நிர்வாகிகள் அதிமுக மகளிர் அணியிலும், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையிலும் சிறப்பாக செயல்பட்டவர்கள். ஆனால் உள்ளூர் அரசியல் காரணமாக அவர்களை தக்க வைக்க தவறிவிட்டது அதிமுக தலைமை.
தெரியவில்லை
இதனிடையே இப்போது கட்சியிக்கு இளம்ரத்தம் பாய்ச்ச வேண்டியது மிக முக்கியம் என்பதால், அதிரடி மாற்றங்களையும், அறிவிப்புகளையும் வெளியிடும் யோசனையில் உள்ளார் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக தனக்கு அரசியல் வியூக வகுப்பாளர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இவரது யோசனைகளையும், திட்டங்களையும் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் எந்தளவு ஏற்கப்போகிறார் எனத் தெரியவில்லை.