கரும்பு கொள்முதலில் முறைகேடு.. விவசாயிகளுக்கு பணம் முழுதாக சென்றுசேரவில்லை.. எடப்பாடி குற்றச்சாட்டு!
சென்னை: பொங்கலுக்காக விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்வதில் முறைகேடு செய்யப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புகார் தெரிவித்துள்ளார். ஒரு கரும்பின் விலை ரூ.33ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு ரூ.15 முதல் 18 வரை மட்டும் சென்று சேர்வதாக தெரிவித்துள்ளார்.
வரும் ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு தரப்பில் ரூ.1,000 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பும் வழங்கப்படும் என்ற தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. பொங்கலுக்கு வழங்கப்படும் ஒரு கரும்பின் விலை ரூ.33ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.

எடப்பாடி பழனிசாமி அறிக்கை
இந்த நிலையில் பொங்கலுக்காக விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்வதில் முறைகேடு செய்யப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புகார் தெரிவித்து இருக்கிறார். இதுக்குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "2023ம் ஆண்டு தைப் பொங்கலுக்காக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு செங்கரும்பு வழங்கப்படும் என்ற எண்ணத்துடன் விவசாயிகள் அதிக அளவில் செங்கரும்பை சாகுபடி செய்துள்ளனர்.

பணம் சென்றடையவில்லை
ஒரு கரும்பு 33 ரூபாய் வீதம் 2.19 கோடி கரும்புகள் கொள்முதல் செய்வதற்காக 72 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு கரும்புக்கு அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 33/- ரூபாய், ஆனால், இப்போது மாநிலம் முழுவதும் அதிகாரிகளும், இடைத்தரகர்களும் இணைந்து ஒரு கரும்புக்கு 15 முதல் 18 ரூபாய் வரை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்குவதாகவும், கரும்பு கொள்முதலில் பெரிய முறைகேடுகள் நடைபெறுவதாகவும் செய்திகள் வருகின்றன.

அரசு உறுதிபடுத்துக
செங்கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை இந்த விடியா அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அரசு அறிவித்த ஒரு கரும்புக்கு விலையான 33/- ரூபாய் முழுவதுமாக விவசாயிகளுக்கு சென்றடைவதை இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். அரசு அறிவித்த கரும்புக்கான முழு தொகையும் விவசாயிகளைச் சென்றடையாவிடில், பொறுப்புள்ள எதிர்கட்சியான நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்.

அதிமுக ஆர்ப்பாட்டம்
அதிமுக சார்பில் செங்கரும்பு பயிரிட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், இந்த அரசை எச்சரிக்கை செய்கிறேன். கரும்பு கொள்முதலில் கமிஷன் அடிக்கும் நோக்கத்தோடு அதிகாரிகள் செயல்படுவது, இடைத்தரகர்களை பயன்படுத்துவது போன்ற திமுக அரசின் விவசாய விரோத செயல்களுக்கு அதிமுக சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications