''சேலம் மத்திய சிறையில் சாராய ஊறல்கள்! சட்டம் ஒழுங்கு சீர்குலைவு''! எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
சென்னை: 2 ஆண்டுகால திமுக ஆட்சியை பார்க்கும் போது "திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்; வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்" என்ற எம்.ஜி.ஆர். பாடலை தான் மக்கள் முணுமுணுப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
குடும்ப பாசத்தில் சிக்கித் தவிக்கும் முதலமைச்சர், பிரச்சனைகளில் சிக்கியுள்ள தனது மந்திரிகளைக் காப்பாற்றுவது எப்படி என்ற எண்ணத்தில் அல்லும் பகலும் பாடுபட்டு வருவதாக ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள பதிவு வருமாறு;
''தமிழகத்தில் ஒருசில இடங்களில், அவ்வப்போது கள்ளச் சாராயம் காய்ச்சுவது இருந்து வந்தாலும், அதிமுக ஆட்சிக் காலங்களின் போது கள்ளச் சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் போன்றவை முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டன. திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கள்ளச் சாராயம் காய்ச்சுவதும், விற்பதும் கன ஜோராக நடந்துவருவது மட்டுமின்றி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 22 பேர் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்துள்ளனர்.''
''அரசின் டாஸ்மாக் கடையில் மது குடித்தவர்கள் மரணமடைந்த அவலங்கள் நிகழ்ந்தபோது, அவர்கள் சயனைடு அருந்தி இறந்ததாக புதுக் கரடி ஒன்றை இந்த அரசு அவிழ்த்து விட்டது. கிராமப் புறங்களில்தான் பூமிக்குள் சாராயம் புதைக்கப்பட்டு இருக்கிறது என்றால், சென்னையில் காவல் துறை தலைமை அலுவலகம் (DGP Office) எதிரே, மெரினா கடற்கரையில், சாராய ஊறல்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்ததும், அவைகள் எதிர்பாராத விதமாக வெளியே எடுக்கப்பட்டதும், திமுக அரசின் செயலற்ற தன்மையின் உச்சமாகும்.''
சேலம் மத்திய சிறையில், கைதிகள் சாராய ஊறல்களைத் தயாரித்து பூமியில் புதைத்து வைத்ததாகவும், அவைகள் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த விடியா ஆட்சியில், சிறைக்குள் கஞ்சா உட்பட போதைப் பொருட்களும், செல்போனும், சிம் கார்டுகளும் அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சாராய ஊறல் தயாரிப்பு என்பது, தமிழகம் எந்த அளவுக்கு சீர்கெட்டுப் போயுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.
''சிறைச் சாலை என்பது தவறு செய்தவர்களை திருத்துவதற்கான இடமே தவிர, மேலும் மேலும் அவர்கள் தவறுகளை செய்யத் தூண்டும் இடமாகவும், அதற்கு அரசாங்கம் உறுதுணையாக இருப்பதும் சமூக அக்கறை கொண்ட யாராலும் ஏற்க முடியாது.''
''70 வயதைக் கடந்த பின்னும், தான் இன்னும் 20 வயது இளைஞராக இருப்பதாக முதலமைச்சர், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது கூறி இருக்கிறார். ஆனால், தமிழக மக்கள் அனைவரும் அவரைப் போலவே திடகாத்திரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வராதது ஏன் என்று புரியவில்லை? உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை கொண்ட முதலமைச்சராக இவர் இருந்தால், இதுபோன்ற சமூக விரோதச் செயல்கள் குறித்து முன்கூட்டியே உளவுத் துறை மூலம் தகவல் அறிந்து நடவடிக்கை எடுத்திருப்பார். ''
''குடும்ப பாசத்தில் சிக்கித் தவிக்கும் முதலமைச்சர், பிரச்சனைகளில் சிக்கியுள்ள தனது மந்திரிகளைக் காப்பாற்றுவது எப்படி என்ற எண்ணத்தில் அல்லும் பகலும் பாடுபட்டு வரும் முதலமைச்சர், பொதுமக்கள் நலன் குறித்தோ, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு பற்றியோ கவலைப்படாமல் ஊழலையும், ஊறலையும் ஊக்குவிக்கும் விதத்தில் செயல்படுவது காலத்தின் கொடுமையாகும்.''
''சேலம் மத்திய சிறையில் நடந்தது போல், மற்ற சிறைகளிலும் நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். சேலம் மத்திய சிறையில் சாராயம் காய்ச்சியவர்கள் மீதும், அதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.''












Click it and Unblock the Notifications