ஆளுநர் தேநீர் விருந்து! ஆதரவாளர்களுடன் ஆஜரான ஓபிஎஸ்.. மிஸ்ஸான எடப்பாடி! உற்று நோக்கும் அதிமுக தலைகள்
சென்னை: 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. 76வது சுதந்திர தினம் இந்தியா முழுவதும் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி 9ஆவது முறையாகத் தேசியக் கொடியை ஏற்றி, சிறப்புரை ஆற்றினார்.
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் .. தரிசனத்திற்கு 2 நாட்கள் காத்திருப்பு..விஐபி தரிசனம் ரத்து
சுதந்திர தின விழா
அதேபோல மாநில தலைநகரங்களில் முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றினர். தமிழகத்தில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் 2ஆவது முறையாகத் தேசியக் கொடியை ஏற்றி, போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து சுதந்திர தின விழாவையொட்டி பல்வேறு சாதனையாளர்களுக்கு அவர் விருதுகளையும் வழங்கினார்.
தேநீர் விருந்து
வழக்கமாகச் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் கவர்னர் சார்பில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படும். சென்னை ராஜ்பவனில் நடக்கும் இந்தத் தேநீர் விருந்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பவில்லை என்பதால் கடந்த குடியரசு தின விழா தேநீர் விருந்தில் திமுகவினர் கலந்து கொள்ளவில்லை.
முதல்வர் ஸ்டாலின்
ஆனால், இப்போது நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளார். இந்தச் சூழலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவருடன் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதிமுக
அதேபோல திமுகவின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், விசிக கட்சி எம்எல்ஏக்களும் இதில் கலந்து கொண்டனர். பெரம்பலூர் எம்.பியாக உள்ள பாரிவேந்தன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டனர். ஆனால், இதில் எல்லாவற்றையும் விடக் கவனம் ஈர்த்தது என்னவோ அதிமுக தலைவர்கள் தான்.
ஓபிஎஸ்
ஆளுநர் அளித்துள்ள இந்த தேநீர் விருந்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். ஓபிஎஸ் ஆதரவாளர்களாகக் கருதப்படும் வைத்தியநாதன், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டு உள்ளனர். அதிமுகவில் உட்கட்சி பூசல் தொடரும் நிலையில், ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆளுநர் தேநீர் விருந்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது
எடப்பாடி மிஸ்ஸிங்
அதேநேரம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. முதல்வராக இருந்த சமயத்தில் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டு இருந்த எடப்பாடி, இந்த முறை மிஸ்ஸானார். அதிமுகவை ஒட்டுமொத்தமாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயலும் எடப்பாடி பழனிசாமி, இந்தக் கூட்டத்தில் மிஸ்ஸாகி உள்ளது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.