"ஒற்றை தலைமை" தீர்மானமா? அதெல்லாம் இப்போ சொல்ல முடியாது.. ஹைகோர்ட்டில் எடப்பாடி தரப்பு காரசார வாதம்
சென்னை : 2017ஆம் ஆண்டு பொதுக்குழுவில், கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுத்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன என ஓ.பி.எஸ் தரப்பு வாதத்திற்கு பதில் அளித்துள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்பு.
நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், ஒற்றைத் தலைமை தீர்மானத்தை கொண்டு வரக் கூடாது என்றும், கட்சி விதிகளில் திருத்தம் செய்யக்கூடாது என்றும் வாதத்தை முன்வைத்துள்ளார்.

அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு, பொதுக்குழுவில் இது நடக்கும், இது நடக்காது என்ற எந்த உத்தரவாதமும் கொடுக்கமுடியாது என எதிர்வாதம் வைத்துள்ளது. பொதுக்குழுதான் கட்சியின் உச்சபட்ச அமைப்பு ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ அல்ல என்பது கட்சி விதி என எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் விஜயநாராயண் வாதத்தை முன்வைத்துள்ளார்.
பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட வலியுறுத்தியுள்ளனர். பொதுக்குழுவைக் கூட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் தடை கேட்கின்றனர். பொதுக்குழுவை இருவரும் இணைந்து கூட்ட முடியும். பொதுக்குழுவின் முடிவுகள் கட்சியினரைக் கட்டுப்படுத்தும். பொதுக்குழுவில்தான் உறுப்பினர்களின் விருப்பம் அறிவிக்கப்படும், இது ஜனநாயக நடைமுறை.
நாளை நடைபெறும் பொதுக்குழுவில் கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்படலாம், அல்லது செய்யப்படாமலும் இருக்கலாம். பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்கப்படலாம்; இது நடக்கும்; இது நடக்காது என்ற எந்த உத்திரவாதமும் கொடுக்கமுடியாது என்றும் எடப்பாடி தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கட்சி விதிகளில் திருத்தம் செய்ய யாரிடமும் ஒப்புதல் பெற வேண்டியதில்லை. தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தால் போதுமானது என்றும் எடப்பாடி தரப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications