நடக்கப்போறத பாருங்க.. பொதுக்குழுவுக்கு தெம்பாக தயாராகும் எடப்பாடி.. பின்னாடி இவ்ளோ பெரிய திட்டம்!?
சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விடக்கூடாது என ஓ.பன்னீர்செல்வம் விடாப்பிடியாக இருந்து வருகிறார். அதுகுறித்து தீவிர ஆலோசனைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்பட்டால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதை வைத்து எடப்பாடி தரப்புக்கு முட்டுக்கட்டை போடலாம் என ஓ.பி.எஸ் தரப்பு திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.
அதேநேரம், எடப்பாடி பழனிசாமியோ, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றுவது எப்படி என எனக்குத் தெரியும், கடந்த முறை விதிகளை திருத்தியது போலவே திருத்திவிடலாம், அதற்கு சாதகமான பாயிண்டுகள் இருக்கின்றன என தெம்பாக இருக்கிறாராம்.

ஒலித்த முழக்கம்
அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்க கடந்த 14ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தின்போது, அதிமுக அலுவலகத்திற்கு வெளியே அதிமுக தொண்டர்களில் ஒரு தரப்பினர் ஒற்றைத் தலைமை வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். மற்றொரு தரப்பினர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

வெடித்த பூகம்பம்
வெளியே மட்டும்தான் இப்படியான கோஷம் என்று பலரும் நினைத்திருக்க உள்ளே நடந்தது அதற்கு மேல் அதிரிபுதிரி ஆக்ஷன் செக்மெண்ட். உள்ளே நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் ஒற்றைத் தலைமை குறித்த விவாதங்களை வரிசையாக அனைவரும் எழுப்பியுள்ளனர். கூட்டத்தில் ஒற்றைத் தலைமை பற்றி பெரும்பாலான நிர்வாகிகள் பேசியதாக ஜெயக்குமார் வெளியே வந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அதன்பிறகுதான் வெடித்தது பூகம்பமே. ஜெயக்குமார் கிள்ளிப்போட்ட திரி பற்றி, கடந்த நான்கு நாட்களும், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இருவருமே தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ஒரே களேபரம்
இரண்டு தரப்பினரும், பல்வேறு இடங்களில் போஸ்டர் யுத்தம் நடத்தினர். இரு தரப்பினருமே ஒற்றைத் தலைமையாக ஓ.பி.எஸ் வர வேண்டும் என்றும், ஈ.பி.எஸ் வர வேண்டும் என்றும் மாற்றி மாற்றி அடித்துக்கொண்டதால், தமிழக அரசியல் களமே களேபரக் காடானது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், 'ஒற்றைத் தலைமை இப்போது தேவையற்றது. பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம். தற்போது இருக்கும் இரட்டை தலைமையே தொடரலாம். 14 பேர் கமிட்டி அமைத்து அவர்களின் முடிவை கேட்டு, நாம் ஒப்புதல் அளிக்கலாம்' எனத் தெரிவித்திருந்தார்.

இன்றும் ஆலோசனை
இந்நிலையில், இன்று மீண்டும் அதிமுக அலுவலகத்தில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்க அனைத்து முக்கிய நிர்வாகிகள் வந்தனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. கூட்டத்திற்கு நிர்வாகிகள் வரும்போதே, அவரின் ஆதரவாளர்களும் அதிகளவில் அதிமுக அலுவலகத்தில் கூடினர். இதனால், காலை முதலே அதிமுக அலுவலகம் பரபரப்பானது. இன்றும் ஓ.பி.எஸ் அலுவலகத்திற்கு வந்தபோது திரண்டிருந்த தொண்டர்கள் ஒற்றைத் தலைமை குறித்து கோஷங்களை எழுப்பினர். அதேபோல், ஜெயக்குமார் உள்ளே நுழைந்தபோது அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர்.

அடிதடி
அலுவலகத்திற்கு வெளியில் கூடியிருந்தவர்களில் ஒரு தரப்பினர் ஜெயக்குமார் ஆதரவாளரும், பெரம்பூர் பகுதிச் செயலாளருமான மாரிமுத்து என்பவரை தாக்கினர். இதில் அவருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. அதன்பின் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம், "எடப்பாடி ஆளா என்று கேட்டுத் தாக்குதல் நடத்தினர்" எனக் குற்றம்சாட்டினார். இதேபோல், அலுவலகத்தின் வெளியே இருந்த ஜெயக்குமார் ஆதரவாளர்களுக்கும், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே, வரும் 23ம் தேதி பொதுக்குழு நடத்தத் தயாராகி வருகிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு.

ஓ.பி.எஸ் திட்டம்
இதற்கிடையே, கட்சி விதிகளில் திருத்தம் செய்யக் கூடாது எனக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், , தங்களுக்கு பெரும்பான்மை கிடைக்காது என அஞ்சி, செயற்கையாக பெரும்பான்மை பெறுவதற்காக சிறப்பு அழைப்பாளர்களை தவிர்க்க எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதாக ஓ.பி.எஸ் பதில் மனு தாக்கல் செய்வார் எனக் கூறப்படுகிறது. இதனால், பொதுக்குழுவில் புதிதாக எந்த முடிவுகளையும் எடுக்க விடாமல் செக் வைக்கலாம் என ஓ.பி.எஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு கடிதம்
மேலும், அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்பட்டால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். ஓ.பி.எஸ்ஸை ஆதரிக்கும் மாவட்ட செயலாளர்களுக்கு ஓ.பி.எஸ் தரப்பு வழங்கிய கடிதத்தில், சட்ட விதிகளைத் திருத்தி, அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்பட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படலாம் என்றும், ஒற்றைத் தலைமைக்காக கட்சி விதிகள் திருத்தப்பட்டால் சட்டப் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள இரட்டைத் தலைமை பதவிக்காலம் முடிவதற்குள் மாற்றம் செய்தால் தேர்தல் ஆணையத்திலும் பிரச்சனையை சந்திக்க நேரிடும் எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து எடப்பாடி தரப்புக்கு முட்டுக்கட்டை போடலாம் என ஓ.பி.எஸ் தரப்பு திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.

தெம்பாக இருக்கும் எடப்பாடி
இத்தனைக்கு மத்தியிலும், எடப்பாடி பழனிசாமி தெம்பாகவே இருக்கிறார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். காரணம், முன்பு கட்சி சட்ட விதிகளைத் திருத்தியதுபோல, இப்போதும் விதிகளைத் திருத்தி எளிதாக பொதுச்செயலாளர் பதவியைக் கொண்டுவந்துவிடலாம் என எடப்பாடி தரப்பு நினைக்கிறதாம். கடந்த ஆண்டு செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பொதுக்குழுவே நினைத்தாலும் நீக்க முடியாது என்ற தீர்மானம் செயற்குழுவில் மட்டுமே நிறைவேற்றப்பட்டதாம். அடுத்த பொதுக்குழுவில் அதற்கு ஒப்புதல் பெற்றுக்கொள்ளலாம் என்று எடப்பாடி தரப்பு கூறியதால், அந்தத் தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவில்லை என்பதால் தற்போதைய சூழலில் அது செல்லாது.

ஒப்புதல் பெறப்படும்
இதேபோல, ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு நடந்த தேர்தலுக்கு இந்த பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாவிட்டால் அதுவும் காலாவதியாகிவிடும். இதன் மூலம், ஏற்கனவே செய்தது போல எளிதாக கட்சி சட்ட விதிகளைத் திருத்த பொதுக்குழுவிலேயே பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெறப்படும். அதற்கு பெருவாரியான ஆதரவு கிடைக்கும் வகையில்தான், சிறப்பு அழைப்பாளர்களும் தவிர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி, மீண்டும் சட்ட விதிகளைத் திருத்தி, ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி உருவெடுப்பார் என உற்சாகமாகச் சொல்கிறார்கள் அவர்கள்.

மாற்றுத் திட்டம்?
எடப்பாடி பழனிசாமி, வழக்கு, எதிர்ப்புகளை எல்லாம் மீறி பொதுக்குழு வரை தனது திட்டத்தைக் கொண்டு சென்றுவிட்டால் என்ன செய்வது என்பது குறித்தும் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறாராம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், தீர்மானத்தை நிறைவேற்ற ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது, பிரச்சனையை பெரிதாக்க வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். ஆக, இன்னும் 5 நாட்களுக்கு அதிமுவுக்குள் பரபரப்புக்கு பஞ்சமில்லை.












Click it and Unblock the Notifications