வைத்திலிங்கம் ஸ்கெட்ச்.. சொன்னபடி நடக்குதே.. அடுத்தடுத்து ஓபிஎஸ் பக்கம் தாவிய டெல்டா நிர்வாகிகள்!
சென்னை : இனிமேல்தான் சம்பவம் இருக்கு என்கிற ரீதியில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்திருந்த நிலையில், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Recommended Video
அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் அணியில் இருந்த நிர்வாகிகள் சிலர் ஓபிஎஸ் தரப்பிற்குத் தாவி வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்களில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் பலம் கூடி வருகிறது. இது எடப்பாடி தரப்புக்கு குடைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இருதரப்பும் இணைந்து செயல்பட்டு, பொதுக்குழுவை நடத்துமாறு நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், அணி தாவும் நிகழ்வுகள் தொடர்ந்து வருவது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

வைத்திலிங்கம்
தஞ்சையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம், "எடப்பாடி பழனிசாமியின் முடிவை மக்களும், கட்சியின் அடிமட்டத் தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் எங்களை நோக்கி வர இருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் அதை நீங்கள் பார்ப்பீர்கள்." எனத் தெரிவித்திருந்தார்.

அரியலூர் நிர்வாகி
அதை மெய்ப்பிக்கும் வகையில் வரிசையாக சம்பவங்கள் நடந்து வருகின்றன. அரியலூர் மாவட்ட அதிமுக இணைச் செயலாளரும், பொதுக்குழு உறுப்பினருமான ஜெயங்கொண்டம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கண்ணகி குப்புசாமி நிர்வாகிகளுடன் திரண்டு வந்து துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தை நேரில் சந்தித்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார்.

ஒன்றிய செயலாளர்
அதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் ஓ.ஏ.ராமச்சந்திரன் வைத்திலிங்கத்தை நேரில் சந்தித்து, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். அவரது ஆதரவாளர்களும், ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். வைத்திலிங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைத்து வருவது ஓபிஎஸ் தரப்புக்கு தெம்பு கொடுத்துள்ளது.

ஓபிஎஸ் ஆலோசனை
சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், தனது பண்ணை வீட்டில் தினமும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். தமிழகம் முழுவதும் ஈபிஎஸ் ஆதரவு நிர்வாகிகளை தம் பக்கம் இழுக்க வேண்டும் என்ற ஓபிஎஸ்ஸின் திட்டப்படி, அவரது ஆதரவாளர்கள் முழுவேகத்தில் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வைத்திலிங்கம் ஸ்கெட்ச்
டெல்டா மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் வைத்திலிங்கம். சென்னையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தேனி சென்ற நிலையில், தஞ்சாவூர் வந்த வைத்திலிங்கம், தனது ஆதரவாளர்களுக்கு தொடர்ந்து அசைன்மெண்ட் கொடுத்து எதிர் தரப்பை கவர்ந்து வருகிறாராம்.












Click it and Unblock the Notifications