அந்த 'ரிப்போர்ட்'.. நடுங்கிப் போன எடப்பாடி..‘யாரையும் நம்ப முடியல’- கட்சியை கைக்குள் வைக்க திட்டம்!
சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபமாக தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து தனது ஆதரவாளர்களைச் சந்தித்து வருகிறார்.
கட்சியினர் மத்தியில் சசிகலாவுக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள ஒரு ரகசிய சர்வே நடத்த உத்தரவிட்ட எடப்பாடி பழனிசாமி, அந்த ரிப்போர்ட்டால் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனால், முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் அதிருப்தியைக் களையும் வகையில், கட்சியையும், தன் நிலையையும் பலப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலா
சிறையிலிருந்து வெளியே வந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சிறிது காலத்திற்கு அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்தார். தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, சசிகலாவை அ.தி.மு.கவில் சேர்க்க வேண்டும் என கட்சிக்குள் குரல்கள் எழுந்தன. மூத்த நிர்வாகிகள் பலரும் கூட சசிகலாவை கட்சியில் சேர்த்தால் அதிமுகவின் பலம் நிச்சயம் அதிகரிக்கும் எனக் கட்சிக்குள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அச்சத்தில் எடப்பாடி
சசிகலாவை கட்சியில் சேர்த்தால் தனது பாடு திண்டாட்டம்தான் என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். எத்தனை நிபந்தனைகளோடு சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வந்தாலும், அவர் மிகவிரைவாகவே கட்சியைக் கைப்பற்றி தன்னை ஓரங்கட்டி விடுவார் என்கிற யோசனையில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதன் காரணமாகவே சசிகலாவுக்கு ஆதரவாக பேசுபவர்களை கட்சியில் இருந்து நீக்கி வருகிறார். சமீபத்தில் கூட சசிகலாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

அரசியல் நகர்வு
சிறையில் இருந்து வரும்போதே அதிமுகவை கூடியவிரைவில் கைப்பற்றும் முடிவோடுதான் வந்தார் சசிகலா. ஆனால், ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி இருந்ததால், முக்கிய நிர்வாகிகளை தன் பக்கம் இழுக்க முடியவில்லை. அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது சசிகலாவிற்குப் பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இருப்பினும், சசிகலா தனது ஆதரவாளர்களை நேரில் சந்திப்பது, திமுக அரசை விமர்சிப்பது என தனது அரசியல் நகர்வுகளைத் தொடர்ந்து வருகிறார்.

பாஜகவில் சசிகலா
சமீபத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், "அதிமுகவில் சசிகலாவை சேர்த்தால் அதிமுக வலுப்பெறும். ஒருவேளை அதிமுகவில் சசிகலாவை சேர்க்க விருப்பம் இல்லை என்றால், அவர் பாரதிய ஜனதா கட்சிக்கு வந்தால் நாங்கள் அவரை வரவேற்போம். அது எங்களுக்கு வளர உதவியாக இருக்கும் என்பதால், இதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம்" எனத் தெரிவித்திருந்தார்.

சசிகலா பதில்
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய சசிகலா, பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் நான் பாஜகவிற்கு வரவேண்டும் என கோரிக்கை வைத்தது அவருடைய தனிப்பட்ட கருத்து. அவர் கட்சிக்கு நான் வர வேண்டும் என்ற அவரது ஆசையை தெரிவிக்கிறார்; வேறு ஒன்றும் இல்லை. இப்போதும் நான்தான் எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன் எனத் தெரிவித்தார்.

சசிகலாவுக்கு பெருகும் ஆதரவு
இதற்கிடையே, சசிகலா தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தனது ஆதரவாளர்களைச் சந்தித்து வரும் நிலையில் அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் சசிகலாவோடு பேசியுள்ளனர். திமுகவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் சசிகலா, அதிமுகவுக்கு விரைவில் தலைமை ஏற்பேன் எனக் கூறி வருகிறார். முன்பு பேசுவதற்கு லேசாக திணறி வந்த சசிகலா, இப்போதெல்லாம் செல்லும் இடங்களில் எல்லாம் செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார். இதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் அவர் மீது நம்பிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மூத்த நிர்வாகிகளும்
மூத்த நிர்வாகிகள் பலரும் கூட சசிகலாவோடு தொலைபேசியில் பேசி வருவதாக தகவல் கிடைத்து எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சியடைந்துள்ளார். மற்ற நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்குவதைப் போல மூத்த நிர்வாகிகளை நீக்க முடியாது. கட்சியின் கட்டுக்கோப்பு கலைந்துவிடும், கட்சியின் ஸ்திரத்தன்மை மீது தொண்டர்களே அதிருப்தி அடையும் சூழல் ஏற்படும் என தனது ஆதரவாளர்களான முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை சொன்னதால் அமைதி காக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

ரிப்போர்ட்
அதிமுக தொண்டர்கள், மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் சசிகலா மீதான ஆதரவு நிலைப்பாட்டில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக ஒரு ரகசிய சர்வேயையும் எடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அந்த ரிப்போர்ட் தான் எடப்பாடிக்கு அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருந்துள்ளது. முன்பு தென் மாவட்டங்களில் மட்டுமே அதிகமாக இருந்து வந்த சசிகலா பாசம், இப்போது வடக்கிலும் பரவி வருவதாக அந்த ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி
கட்சியின் தலைமை பதவிக்கு குறி வைத்து தான் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், கட்சிக்குள் சசிகலாவின் செல்வாக்கு அதிகரித்திருப்பதால் இபிஎஸ் அச்சமடைந்துள்ளார். ஓபிஎஸ் தரப்பினரும் தற்போது தன் மீது அதிருப்தியில் இருக்கும் நிலையில், இந்த நிலை நீடித்தால் தனக்கும், கட்சிக்கும் ஆபத்து என கணக்கு போட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதனால் கட்சியில் தன் நிலையை உறுதிப்படுத்திக் கொண்டு, தொண்டர்களின் நம்பிக்கையைப் பெறும் முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளதாக கிசுகிசுக்கின்றனர் அதிமுக வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications