அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்! மத்திய அரசு கொடுத்த கிஃப்ட்! புண்படுத்திட்டே இருக்காங்க..அப்போ ஓபிஎஸ்?
சென்னை : ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளதால் ஓபிஎஸ் தரப்பு கடும் அதிர்ச்சியடைந்துள்ளது.
அதிமுக ஒற்றை தலைமை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுக சார்பில் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான அதிமுக வரவு செலவு கணக்குகள் நவம்பர் 29ஆம் தேதியே அதிமுக இடைக்கால பொதுச்செயாளர் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதிமுக ரேஸ்
இந்த கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளதோடு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்ற அடிப்படையில் தாக்கல் செய்த விவரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்திலும் பதிவேற்றி உள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்த அடுத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதிமுக ஒற்றை தலைமை ரேசில் தற்போது முன்னணியில் இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி தான்.

தேர்தல் ஆணையம்
காரணம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என சென்னை உயர்நீதிமன்றமும், கணக்கு வழக்குகளை ஏற்றுக் கொண்டதன் மூலம் தேர்தல் ஆணையமும் அங்கீகரித்து இருக்கிறது. இருந்த போதும் அதிமுகவின் தலைமை நான் தான் எனது கட்டுப்பாட்டில் தான் அதிமுக இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் விட்டுக் கொடுக்காமல் தன்னால் என்னென்ன இடைஞ்சல்களை கொடுக்க முடியுமோ அனைத்தையும் எடப்பாடிக்கு வழங்கி வருகிறார். அதே நேரத்தில் அதிமுகவில் தங்களுக்குத்தான் ஆதரவு என ஓபிஎஸ் தரப்பு இன்னும் கூறி வருகிறது, காரணம் அமித் ஷாவுடன் சந்திப்பு, ஜேபி நட்டாவுடன் சந்திப்பு என அந்த அணியும் பட்டியலை அடுக்கு வருகிறது.

இடைக்கால பொதுச்செயலாளர்
அதற்கு முன்னதாகவே இபிஎஸ்சை இடைக்கால பொதுச்செயலாளர் என மத்திய அரசு கூறியிருந்தது. ஏற்கனவே பாஜக தலைமை ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கியத்துவம் தருவதை பொருத்துக் கொள்ளாத எடப்பாடி பழனிச்சாமி இடையில் தனது முன்னாள் அமைச்சரவை சகாக்கள் மூலம் பாஜகவால் தனித்துப் போட்டியிட முடியுமா என பேச வைத்தார். இதனால் அதிர்ந்து போன பாஜக தலைமை எடப்பாடி தரப்பை சமரசம் செய்து ஓ.பன்னீர்செல்வத்தை புறக்கணிக்க தயாராகிவிட்டதாக கூறப்பட்டது. அந்த வகையில் ஜி20 மாநாடு தொடர்பாக டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி
இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி பாஜகவை விமர்சிக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர்களுக்கும் கட்சியினருக்கும் வேண்டுகோள் விடுத்தார். இதனால் பாஜக அதிமுக கூட்டணி தொடரும் எனவே கூறப்பட்டது. இந்த நிலையில் புத்தாண்டு பரிசாக அதிமுக பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிச்சாமியை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் நீண்ட நாட்களாக இந்திய அரசியலில் பேசுபவர்களாக இருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருக்கிறது.

சட்ட அமைச்சகம்
இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால் அதிமுகவின் பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மத்திய சட்டத்துறை அமைச்சகம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக அங்கீகரித்ததாக அந்த அணியினர் கூறி வருகின்றனர்.

ஓபிஎஸ் அப்செட்
இதுவரை மத்திய அரசு இடைக்கால பொதுச் செயலாளர் என எடப்பாடி குறிப்பிட்டு நிலையில் தற்போது முதன்முறையாக அதிமுகவின் பொதுச் செயலாளர் என இபிஎஸ்ஐ குறிப்பிட்டுள்ளது சாதாரண விஷயம் இல்லை. ஏற்கனவே தேர்தல் ஆணையம் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என இபிஎஸ்ஐ ஏற்று கொண்ட நிலையில் தற்போது மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் இந்த கடிதம் ஆனது மிக முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. பாஜக தலைவர்கள் தனக்கு ஆதரவாக இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறி வந்தாலும் அடுத்தடுத்து மத்திய அரசு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எனவும் பொதுச்செயலாளர் எனவும் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டு வருவதால் ஓபிஎஸ் தரப்பு கடும் அப்செட் ஆகி உள்ளது.












Click it and Unblock the Notifications