ஜெ எடுத்த அதே அஸ்திரம்! சும்மா விடுவாரா இபிஎஸ்? சென்னை மீட்டிங்கில் ’முக்கிய’ ப்ளான்! பரபர மாஜிக்கள்
சென்னை : சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என எடப்பாடி அதிரடியாக அறிவித்துள்ளதோடு ஆளும் கட்சியான திமுகவுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் தமிழகத்திலேயே பிரம்மாண்டமான வகையில் அதிமுக மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டு இருக்கிறார். அதற்கான தேவை என்ன? பின்னணி என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
ஒருபுறம் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற பாஜகவின் புற அழுத்தம் மறுபுறம் நான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் உள்ள அழுத்தம் என இருதலைக் கொள்ளி எறும்பாக சிக்கித் தவிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
அதே நேரத்தில் நான்கு ஆண்டுகளில் ஆட்சியில் இருந்தபோது சந்திக்காத நெருக்கடியையா தற்போது பார்த்து விட போகிறோம். எதுவாக இருந்தாலும் அரசியலின் அடியாழத்தை பார்க்காமல் விடமாட்டேன் என அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகியே தீர வேண்டும் என கங்கணம் கட்டி காய்களை நகர்த்தி வருகிறார்.

அதிமுக மோதல்
ஏற்கனவே முந்திக்கொண்டு ஓ.பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர் கூட்டத்தைக் கூட்டி ஆவேசமாக பேசிய நிலையில் லேட்டாக இருந்தாலும் லேட்டஸ்டாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நேற்று சென்னையில் கூட்டினார் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி. சி.வி சண்முகம் உடனான மோதல், பாஜக தலைமைக்கு பதிலடி, ஓபிஎஸ்-க்கு பதில் என இன்றைய கூட்டம் களைகட்டும் என அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாது தமிழக முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளும் நிபுணர்களும் கூர்மையாக கூட்டத்தை கவனித்து வந்தனர்.

எடப்பாடி பழனிசாமி
எதிர்பார்த்தது போல அல்லாமல் வேறு வகையாக கூட்டத்தை நடத்திச் சென்றார் எடப்பாடி. கூட்டத்தில் பங்கேற்ற கேபி முனுசாமி, சிவி சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் ஓபிஎஸ்ஐ வழக்கம்போல் வெளுத்து வாங்க இனிமேல் அவரை அவ்வாறு பேசக்கூடாது ஓபிஎஸ்ஐ பொதுவெளியில் விமர்சிக்க வேண்டாம் என போட்டு தாக்கினார் எடப்பாடி. இதை ஓ.பன்னீர்செல்வம் தரப்பே எதிர்பார்த்து இருக்காது. மேலும் பாஜக அதிமுக விவகாரங்களில் தலையிடுவதில்லை அவர்கள் இதுவரை அழுத்தம் கொடுத்ததும் இல்லை எனவே பாஜக குறித்தும் பேச வேண்டாம் என மறைமுகமாக சிவி சண்முகத்துக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.

பாஜகவுக்கு ஷாக்
இதனால் பாஜக தரப்பு குளிர்ந்து போனது. ஆனால் அதே நேரத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தார் எடப்பாடி. இந்த நிலையில் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் அதிமுக மாநில மாநாடு நீண்ட காலத்திற்குப் பிறகு நடைபெற இருக்கிறது என்பதுதான் அந்த செய்தி. ஜெயலலிதா 2011 தேர்தலை சந்திப்பதற்கு முன்னதாக கோவை மதுரை என பல்வேறு இடங்களில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார். கிட்டத்தட்ட மாநாட்டை விட அதிக கூட்டம் சேர்ந்தது.

மாநில மாநாடு
அதிமுக ஆட்சி அமைப்பதற்கான ஒரு திறவுகோலாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு அடுத்து அதே வகையில் மாநாட்டை நடத்த வேண்டும் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் எண்ணமாக இருக்கிறது. அதனை கூட்டத்தில் கலந்து கொண்ட சீனியர்களும் ஒப்புக்கொண்ட நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக இந்த பிரம்மாண்ட மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. திமுக அரசின் செயல்களுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு அதிமுக குறித்து மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாநில மாநாடு நடத்த வேண்டும் என எடப்பாடி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

பரபர மாஜிக்கள்
மேலும் தமிழக அளவிலும் தேசிய அளவில் பல்வேறு விவகாரங்களை தீர்மானமாக நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக இப்படி ஒரு மாநாட்டை நடத்தினால் அதிமுக தொண்டர்கள் முதல் உயர்மட்ட நிர்வாகிகள் வரை உற்சாகமடைவார்கள். மேலும் தொண்டர்களை அதிக அளவில் திரட்டுவதன் மூலம் அதிமுகவின் முகம் இனி நான்தான் என்பதை உறுதியாக எடுத்துச் செல்ல முடியும் என நம்புகிறார் எடப்பாடி. இதை அடுத்து மாநாட்டுப் பணிகளை மேற்கொள்ளும்படி அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார் .அவர்களும் தீவிரமாக பணியாற்றி வருவதாக கூறுகின்றனர் அதிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications