ஒன்றரை மணி நேரம்.. சடாரென நிர்வாகிகளை அழைத்த எடப்பாடி.. பொதுக்குழு? “முக்கிய முடிவு”.. உடனே ஆக்சன்!
சென்னை : அதிமுக இரட்டை இலை சின்னம் குறித்த மனுவில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுடன் ஈரோடு அருகே உள்ள தனியார் விடுதியில் நேற்று சுமார் ஒன்றரை மணி நேரமாக ஆலோசனை நடத்தினார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர்.
அதன்படி, இடைத்தேர்தல் நெருங்குவதால் குறைந்த கால அவகாசத்தில் பொதுக்குழுவை கூட்டுவது சாத்தியமில்லாத காரணத்தால், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் சுற்றறிக்கை கொடுத்து, அவர்களின் கையெழுத்துகளைப் பெறுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கும், இந்த சுற்றறிக்கையை அனுப்பி அவர்களின் நிலைப்பாட்டை பதிவு செய்வது என்றும் எடப்பாடி பழனிசாமி அணி தீர்மானித்துள்ளது.

அவைத்தலைவர்
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளதால், ஓபிஎஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர். பொதுக்குழு முடிவு செய்யும் வேட்பாளரை அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் என்றும், அவைத்தலைவரின் பரிந்துரை மீது தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுக்குழு - சுப்ரீம் கோர்ட் உத்தரவு
மேலும், அதிமுக வேட்பாளர் பொதுக்குழு மூலம் இறுதி செய்யப்படுவார் என்றும் வேட்பாளரை தேர்வு செய்யும் விவகாரத்தில் பொதுக்குழுவில் வாக்கெடுப்பு நடைபெறவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவுகளை அவைத்தலைவர் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விவகாரத்திற்கு மட்டும் இது பொருந்தும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் பொதுக்குழு?
இந்த தீர்ப்பு அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு அணியினரும் வேட்பாளர்களை அறிவித்துள்ள சூழலில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை தேர்வு செய்ய பொதுக்குழுவை கூட்டுங்கள் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இரு அணிகளிலும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி இந்த தீர்ப்பு தொடர்பாக தனது அணியின் நிர்வாகிகளுடனும், சட்ட வல்லுநர்களுடனும் ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஈபிஎஸ் அணி திட்டம்
பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தாலும், பொதுக்குழுவைக் கூட்ட தேர்தலுக்குள் நேரமில்லை என்பதால், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மூலம் அதிமுக வேட்பாளரின் பெயரைக் குறிப்பிட்டு ஒரு சுற்றறிக்கையை தயார் செய்து பொதுக்குழு உறுப்பினர்களின் பார்வைக்கு வைத்து அவர்களின் ஆதரவுக் கையெழுத்துடன் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பலாம் என எடப்பாடி அணி தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஓங்கிய கை
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களாக உள்ள பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் இந்த சுற்றறிக்கையை அனுப்பி, அவர்களின் ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலைப்பாட்டையும் பதிவு செய்து மற்ற பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்துகளோடு அவைத் தலைவர் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. என்ன தான் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் நேற்றைய உத்தரவு டம்மி ஆக்கினாலும், அவைத்தலைவருக்கு பி ஃபார்மில் கையெழுத்து போடும் அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதன் மூலம், எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கியுள்ளது.

ஆலோசித்த ஈபிஎஸ்
இந்நிலையில் ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் எடப்பாடி பழனிசாமி, மூத்த நிர்வாகிகள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசித்துள்ளனர். சட்ட வல்லுநர்கள் தெரிவித்த கருத்துகளை முன்வைத்து நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

ஈபிஎஸ் முடிவு
அப்போது, பொதுக்குழு உறுப்பினர்களிடம் வேட்பாளர் தேர்வு தொடர்பாக சுற்றறிக்கை கொடுத்து, அவர்களின் கையெழுத்தைப் பெறுவோம். அதேபோல, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களாக இருக்கும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அந்த சுற்றறிக்கை ஒப்புதல் படிவத்தை அனுப்பி வைப்போம். 2 நாட்களுக்குள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்தைப் பெற்று தேர்தல் ஆணையத்தில் அவைத்தலைவர் மூலம் சமர்ப்பிப்போம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சுற்றறிக்கை
இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணி வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை ஒப்புதல் படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று வழங்கப்படவுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒப்புதல் படிவம் வழங்கப்பட்டு நாளை இரவுக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் மாவட்ட பொறுப்பாளர்கள் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு படிவம் வழங்கப்படும் என்றும் உறுப்பினர்களின் வேட்பாளர் ஒப்புதல் படிவம் திங்களன்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications