தாமரை புள்ளியுடன் சீக்ரெட் மீட்டிங்.. சீனியர்களுக்கு பறந்த மெசேஜ்.. பேச்சை எடுத்தாலே ஆஃப்! என்னவாம்?
சென்னை : எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுக்கு முக்கியமான சமிக்ஞையை காட்டியிருக்கிறாராம். அதுவும் பாஜக மேலிடத்துக்கு நெருக்கமான முக்கிய புள்ளி ஒருவர் உடனான சந்திப்புக்குப் பிறகு தான் இந்த மெசேஜ் பாஸ் ஆகியிருக்கிறதாம்.
ஓபிஎஸ், ஈபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஒருங்கிணைந்த அதிமுகவுடனே தாங்கள் கூட்டணி அமைக்க விரும்புவதாக பாஜக தலைமை தெளிவாகச் சொல்லிவிட்டது.
மற்ற மூவரும் இதனை ஏற்றுக்கொண்டாலும், எடப்பாடி பழனிசாமி தான் முரண்டு பிடித்து வருகிறார். தனக்கு நெருக்கமான சிலரிடம் மட்டும் இது தொடர்பாக ஆழமாக ஆலோசித்துள்ளார் ஈபிஎஸ்.
இதற்கிடையே சமீபத்தில், பாஜகவைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவரும் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசி இருக்கிறாராம். அதன்பிறகு ஈபிஎஸ் தனது ஆதரவாளர்களிடம் சில விஷயங்களைப் பேசியுள்ளார் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தினர்.

பாலிஷ் ஆக
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை வந்த பிறகு, அது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எங்கும் வேகமாகப் பேசவில்லை. தனது ஆதரவாளர்களிடம், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பாக பொதுவெளியில் விவாதம் ஆகும் அளவுக்கு எதும் விமர்சிக்க வேண்டாம், சசிகலா மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தாலும், இதை நாம் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஆணையத்தை அமைத்ததே நாம் தான் என்பதால் இந்த அறிக்கைக்கு எதிராகவோ, ஆதரவாகவோ ஒன்றும் பேச வேண்டாம். செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினாலும் பாலிஷாக பேசிவிடுங்கள் என அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது.

கொஞ்சம் சைலண்ட்
சட்டப்பேரவை இருக்கை தொடர்பாக கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி, ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைகள் பற்றி பெரிதாக எந்த விமர்சனமும் வைக்கவில்லை. பாஜகவின் ஆதரவு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பக்கம் சாய்ந்திருப்பதை அறிந்திருப்பதால், பாஜகவின் நகர்வுகளைக் கவனமாகப் பார்த்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதன்படியே, ஓபிஎஸ் மீதான நேரடி அட்டாக்குகளையும் ஈபிஎஸ் குறைத்துக் கொண்டார் என்கிறார்கள்.

தப்பா நினைச்சுக்காதீங்க
இந்நிலையில், சமீபத்தியில், பாஜகவின் முக்கிய புள்ளி ஒருவர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசியிருக்கிறாராம். 2024 தேர்தல் தொடர்பாக பாஜக என்ன முடிவில் இருக்கிறது என்பதை எடப்பாடி பழனிசாமியிடம் விலாவாரியாகத் தெரிவித்த அந்த நிர்வாகி, பாஜக தலைமை நீண்டகால நோக்கில் தான் அதிமுக விஷயத்திலும் தீர்வுகாண விரும்புகிறது, ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு கொடுப்பதாகவும், உங்களை தவிர்ப்பதாகவும் நீங்கள் தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

இதுதான் அவசியம்
நிறைய பிரச்சனைகள் நமக்கு சாதகமாக இருக்கின்றன. திமுக அரசை விமர்சிக்க நமக்கு நிறைய பாயிண்டுகள் இருக்கின்றன. இந்தச் சூழலை மட்டும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் 2024 தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடித்து விடலாம். அதற்கு, கட்டாயமாக நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் முடியும், எதிர்க்கட்சிகள் செய்யும் தவறையே நாமும் செய்யக்கூடாது என நினைக்கிறது தலைமை என பக்குவமாகப் பேசியுள்ளார்.

பட்டும் படாமல்
அவரது பேச்சின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது, அதற்குள் முழுமையாக எல்லாவற்றையும் சரி செய்து விடலாம் எனப் பட்டும் படாமல் கூறி அனுப்பி வைத்துள்ளார். ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணையும் முடிவு பற்றி பாஜக பிரதிநிதிக்கு ஈபிஎஸ் எந்த உத்தரவாதமும் சொல்லாமல் சந்திப்பை முடித்துக் கொண்டாராம்.

சைலண்ட் ப்ளீஸ்
ஆனால், இந்தச் சந்திப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி, தன்னைச் சந்திக்கும் நிர்வாகிகளிடம், யாரையும் கடுமையாக விமர்சித்துப் பேச வேண்டாம், கொஞ்ச காலம் அமைதியாக இருங்கள், திமுக அரசின் குறைகளைச் சொல்வதில் மட்டும் கவனம் இருக்கட்டும், மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறியிருக்கிறாராம்.

பேச்சு கட்
முன்பெல்லாம் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் நடத்தும் ஆலோசனைகளின் போது ஓபிஎஸ், சசிகலா தரப்புக்கு எதிராக நிறைய விஷயங்கள் ஆலோசிக்கப்படும், ஆனால், சமீப நாட்களாக, தன்னைச் சந்திக்கும் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் பற்றி பேச்செடுத்தால் கூட, விடுங்க பார்த்துக்கலாம் எனக் கூறி விவாதங்களைத் தவிர்த்து விடுகிறாராம்.

மனமாற்றம்
ஓபிஎஸ்ஸுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் பாஜக நடந்துகொண்டதால் அக்கட்சியையே சீண்டிப் பேசிய இவரா இப்படி என அவரது ஆதரவாளர்களே ஷாக் ஆகியுள்ளனர். ஆனால், அவருக்கு நெருக்கமானவர்கள் தான், பாஜக புள்ளியுடன் நடந்த சந்திப்பையும், அதன்பிறகு ஈபிஎஸ் நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும் பற்றி பற்றவைக்கிறார்கள். ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கக்கூடும் என்றும் கிசுகிசுக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications