அப்பாவு அப்பவே சொன்னாரே! ஆறுமுகசாமி அறிக்கையால் இபிஎஸ் அணியில் சிக்கல்! சிக்கும் சி.விஜயபாஸ்கர்!
சென்னை : தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இபிஎஸ் தரப்பில் இருக்கும் முன்னாள் அமைச்சரான சி.விஜயபாஸ்கர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் எடப்பாடி அணிக்கு இதுவும் ஒரு வகையில் சிக்கல்தான் என பார்க்கப்படுகிறது.
தற்போது தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் தூத்துக்குடி அறிக்கை ஆகியவை எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் நெருக்கடியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஆறுமுக சாமி ஆணைய விவகாரம் இபிஎஸ் தரப்பில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராக இருக்கும் என தகவல்கள் உலாவி வந்தன. குறிப்பாக இன்று காலை சபை கூடிய போது எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

சட்டசபை கூட்டத்தொடர்
அப்போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு & ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் வெளியிடப்பட உள்ளதால், அச்சத்தில் அதிமுகவினர் அவையில் அமளி செய்கின்றனர் என அமைச்சர் துரைமுருகன் கூறினார். இதே கருத்தை சபாநாயகரான அப்பாவுவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், சட்டசபையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்
அதில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் தற்போதே பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.. சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது. சசிகலாவைக் குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது என ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் பரபரப்பு தகவல் இடம்பெற்றிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இது ஒரு வகையில் சிக்கல் தான்.

சி.விஜயபாஸ்கர்
இந்த அறிக்கையில் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என ஆணையம் பரிந்துரை செய்திருக்கும் நிலையில், இதனால் சி விஜயபாஸ்கர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே குட்கா ஊழல் உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கியிருக்கும் சி.விஜயபாஸ்கருக்கு இது மேலும் சிக்கல் தான் என்கின்றனர் அவர் தரப்பு ஆதரவாளர்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது நடத்தப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணை அறிக்கையும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முழுக்க முழுக்க காவல்துறை மீதும், மாவட்ட ஆட்சியர் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. காவல்துறையை அப்போது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் எடப்பாடி பழனிசாமி என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications