வெயிலால் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை..! மாணவர்களுக்கு சாதகமா? பாதகமா? கல்வியாளர்கள் கூறுவது என்ன?
சென்னை : தொடர் விடுமுறையால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மே மாதம் 10 நாட்கள் முதல் 13 நாட்கள் வரை மட்டுமே விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்த நிலையில், தற்போது மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.
Recommended Video
தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று கொண்டு இருந்தது.
சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த காரணத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் செயல்பட தொடங்கியது. அதன் தொடர்ந்து நேரடி தேர்வுகளும் நடைபெற்று வருகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை
இந்நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வரலாம், தேர்வு இல்லாத நாட்களில் 1 முதல் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை எனவும், வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது பள்ளிக் கல்விக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு மாணவர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும், மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

கற்றல் திறன் பாதிப்பு
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேசிய தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி," தற்போது கோடை காலத்தில் பள்ளி நேரத்தை குறைக்க வேண்டும் என்றும் குறைந்தது சனிக்கிழமைகளில் பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பள்ளிக் கல்வித் துறைக்கு வந்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக ஒன்றரை ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டதால் பொதுத் தேர்வு எழுத வேண்டிய மாணவர்களுக்கான பாடங்களை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது குறைக்கப்பட்ட பாடங்கள் போக மீதம் உள்ள பாடங்களை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது

திடீர் மாற்றம்
அதனால் இந்த ஆண்டு மே மாதம் 10 அல்லது 13 நாட்கள் மட்டுமே பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும். அடுத்த ஆண்டில் வழக்கம் போல ஒன்றரை மாதம் வரை கோடை விடுமுறை விடப்படும். என கூறியிருந்தார். ஆனால் தற்போதைய அவரது அறிவிப்பு அதற்கு நேர்மாறாக உள்ளதாக கல்வியாளர்களும் , பெற்றோர்களும் கூறியியுள்ளனர். காரணம் கோடைக் காலம் என்றாலும் காலையில் பள்ளி செல்லும் மாணவர்கள், மாலையில் தான் வீடு திரும்புவார்கள்.

வெயில் தாக்கம்
பெரும்பாலான நேரங்களில் பள்ளி கட்டிடங்களிலேயே இருக்கும் மாணவர்கள் வெயிலில் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்கின்றனர். தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான மாணவர்கள் வீடுகளில் தங்காமல் வெயிலிலேயே சுற்றித் திரிய வாய்ப்புள்ளதோடு, முக்கியமாக தேர்வு நெருங்கும் நேரத்தில் அவர்கள் கல்வி தான் பாதிக்கப்படும் என்றும் ஏற்கனவே கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் வெயிலை காரணம் காட்டி மூடப்படுவது இன்னும் கற்றல் திறனை பாதிக்கவே செய்யும் எனவும் கருதுகின்றனர்.

பெற்றோர்கள் கோரிக்கை
ஏற்கனவே கடந்த சில நாட்களாக பள்ளிகளில் மாணவர்கள் நடனமாடுவது, மது அருந்துவது, ஆசிரியர்களை அடிக்க முயல்வது என அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. ஆனால் அதைவிடுத்து மாணவர்களை மீண்டும் வீட்டிற்கு அனுப்புவது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் எனவும் , எனவே இந்த தமிழக பள்ளிக்கல்வித் துறையின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கல்வியாளர்களும் பெற்றோர்களும் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications