Election Exclusive: மதுரை திமுகவுக்கு செம அடி! போன வாரம் ரைட் ஹேண்ட்..இந்த வாரம் லெஃப்ட் ஹேண்ட்! அதிமுகவில் எஸ்ஸார் கோபி
சென்னை: திமுக நிர்வாகியும் மு.க. அழகிரி ஆதரவாளருமான மதுரை எஸ்.ஆர். கோபி, ( எஸ்ஸார் கோபி) எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். இதனால் மதுரை அரசியல் களத்தில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்ததை அடுத்து மதுரையின் முக்கிய திமுக முகமாக விளங்கிய எஸ்.ஆர் கோபியும் அதிமுகவில் இணைத்துக் கொண்டது அதிமுகவில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. முக்கிய நிர்வாகிகளை தங்களது அணியில் இணைக்கும் முயற்சிகள் அதிகரித்து வருகின்றன.
இந்த சூழலில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கிய கட்சிகளுக்கிடையே நிர்வாகிகள் மாற்றம் நடைபெற்று வருகிறது. இந்த மாற்றங்களில் முக்கியமான ஒன்றாக மதுரையைச் சேர்ந்த எஸ்.ஆர். கோபி அதிமுகவில் இணைந்திருப்பது குறிப்பிடப்படுகிறது.

அழகிரி ஆதரவாளர்
நீண்ட காலமாக திமுகவில் செயலில் இருந்து வந்த அவர், திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார். மேலும், தென் மாவட்ட அரசியலில் முக்கிய தாக்கம் செலுத்திய மு.க. அழகிரியின் நெருங்கிய ஆதரவாளராகவும் அறியப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்ஸார் கோபி
ஏற்கனவே மதுரையில் திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் சமமான பலத்துடன் செயல்பட்டு வந்த சூழலில், இந்த இணைப்பு முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன், மதுரை முன்னாள் துணை மேயரும் மு.க. அழகிரி ஆதரவாளருமான மன்னன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்திருந்தார். தொடர்ந்து அதே அணியைச் சேர்ந்த எஸ்.ஆர். கோபியும் அதிமுகவில் இணைந்திருப்பது அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.
மு.க. அழகிரி
மதுரை அரசியலில் மு.க. அழகிரிக்கு நெருக்கமானவர்களில் பொட்டு சுரேஷ் மற்றும் எஸ்.ஆர். கோபி முக்கியமாக குறிப்பிடப்பட்டனர். பொட்டு சுரேஷ் மர்மக் கும்பலால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அழகிரி அணியில் செயலில் இருந்தவர் எஸ்.ஆர். கோபிதான் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. பின்னர் அவர் மு.க. ஸ்டாலின் ஆதரவாளராக செயல்பட்டதாக கூறப்பட்டது.
அதிமுக
இருப்பினும், கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படாத நிலையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பின்னணியில் அவர் அதிமுகவில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது. மதுரையில் திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் வலுவான அமைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், இந்த இணைப்பு அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளுக்கு வழிவகுக்கலாம் என்ற அரசியல் பேச்சு நிலவுகிறது. தேர்தல் சூழ்நிலை தீவிரமடைந்து வரும் நிலையில், மதுரையின் முக்கிய நிர்வாகிகள் கட்சி தாவுவது தொடரும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தென்மாவட்ட அரசியல்
மதுரை திமுகவின் முக்கிய முகமான மு.க.அழகிரி தென்மாவட்ட அரசியலை கையில் வைத்திருந்தார். குறிப்பாக மதுரை மொத்தமும் அவரது கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என தென் மாவட்டங்களில் அவருக்கு பெரிய ஆதரவாளர் வட்டம் இருந்தது. இதற்கிடையே கலைஞருக்கு பிறகு ஸ்டாலின் தான் அரசியல் வாரிசு என்பதை உணர்ந்த பல திமுக புள்ளிகள் ஸ்டாலின் பக்கம் சாய்ந்து விட்டனர்.
மதுரை அரசியல் பரபரப்பு
இடையில் நாளேடு ஒன்றின் கருத்துக்கணிப்பு திமுகவில் மிகப்பெரிய புகைச்சலை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு நடந்த சம்பவங்கள் தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார் முக அழகிரி. அவருடன் சேர்த்து அவரது ஆதரவாளர்களான மன்னன், எஸ்ஆர் கோபி, இசக்கி முத்து, முபாரக் மந்திரி, திருப்பரங்குன்றம் கார்த்திகேயன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதில் திருப்பரங்குன்றம் கார்த்திகேயன் தவெகவில் இணைந்த நிலையில், மன்னன், எஸ்ஆர் கோபி அதிமுகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications