இனி மாதந்தோறும் மின்கட்டணம் மாறுமா? புதிய சட்ட திருத்த மசோதா என்பது என்ன? அமைச்சர் முக்கிய விளக்கம்
சென்னை: மத்திய அரசின் புதிய மின்சார சட்ட திருத்த சட்ட மசோதாவால் இனி மாதந்தோறும் மின்கட்டணம் மாறும் என செய்திகள் பரவி வரும் நிலையில் அதுபற்றியும், இந்த மசோதாவை பொறுத்தமட்டில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கி கூறினார்.
சென்னையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகளின் 2ம் நாள் நேர்காணல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார்.
அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது மின்இணைப்புடன் ஆதார் அட்டை இணைப்பு பற்றியும் மாததந்தோறும் மின்கட்டணம் மாறும் என வெளியாகி உள்ள செய்தி குறித்தும் தெளிவாக விளக்கம் அளித்தார். இதுபற்றி செந்தில் பாலாஜி கூறியதாவது:
உதயநிதி - மு.க.அழகிரி சந்திப்பு.. திருமங்கலம் ஃபார்முலாவை கேட்டிருப்பார்.. ஜெயக்குமார் விமர்சனம்!
மின்கட்டணம் மாதந்தோறும் மாறுமா?
தமிழ்நாட்டில் 2 கோடியே 1 லட்சம் பேர் ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைத்துள்ளனர். மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காதவர்கள் ஜனவரி இறுதிக்குள் இணைக்க வேண்டும். புதிய மின்சார சட்ட திருத்த மசோதாவால் மாதந்தோறும் மின்கட்டணம் மாறும் என வரும் செய்தி முற்றிலும் தவறானது. நாடாளுமன்றத்தில் இந்த சட்டதிருத்த மசோதா கொண்டு வரும்போதே அதை திமுக எதிர்த்தது. தற்போது இந்த மசேதா நாடாளுமன்ற நிலை குழுவில் உள்ளது. மின்துறையை தனியாருடம் ஒப்படைக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. புதிய மின்சார திருத்த சட்ட மசோதாவை முதலமைச்சர் ஏற்றுக்கொள்ளமாட்டார்.
திமுக மிகப்பெரிய வெற்றி
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெறும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். இடைத்தேர்தலில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற போகிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். மக்கள் முதலமைச்சர் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். இந்த தேர்தலில் நோட்டாவுடன் போட்டிப்போடக்கூடிய கட்சிக்கு முக்கியத்துவம் தரக்கூடாது.
விமான கதவு விவகாரம்
விமான கதவு திறக்கப்பட்டது தொடர்பாக மத்திய அமைச்சரே ஒப்புக்கொண்டார். விமான கதவு திறக்கப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பொய் கூறுகிறார். ஏப்ரல் மாதம் வாட்சுக்கான பில் தருகிறேன் என கூறினார். ரபேல் கடிகாரத்துக்கான பில் கையில் இருந்தால் கொடுக்க வேண்டியது தானே. எதற்காக காலம் தாழ்த்த வேண்டும்.
விளையாட்டு வீரர்கள் எழுச்சி
தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு ஒட்டுமொத்தமாக விளையாட்டு வீரர்களும் எழுச்சி பெற்றுள்ளனர். இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் செஸ் போட்டிகளை நடத்தி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் முதலமைச்சர் முகஸ்டாலின்'' என்றார்.