"மனசுல படையப்பானு நினைப்போ".. ரஜினி ஸ்டைல் செய்து பொத்தென குப்புற விழுந்த யானை - பரபர வீடியோ
சென்னை: படையப்பாவில் நடிகர் ரஜினிகாந்தை போல ஸ்டைல் செய்த யானை அடுத்த நொடியே குப்புற விழுந்த வீடியோ சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.
இந்த வீடியோவுக்கு சிலர் படையப்பா திரைப்படத்தின் பிஜிஎம் (பேக்கிரவுண்ட் மியூசிக்) கொடுத்து அசத்தியுள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
பகிரப்பட்ட ஒரு சில மணிநேரங்களிலேயே லட்சக்கணக்கானோர் இந்த வீடியோவை பார்த்தும், ரீட்வீட் செய்தும் இருக்கிறார்கள்.
காயம்பட்ட குட்டி யானை.. கலங்கிபோன ராகுல் காந்தி.. உருக்கமாக செய்த செயல்.. நெகிழ்ச்சி சம்பவம்
விலங்குகளின் குறும்புத்தனம்..
காட்டு விலங்குகள் மிகவும் ஆபத்தானவை என்பது அனைவரும் அறிந்ததுதான். சிங்கம், புலி போன்ற விலங்குகள் குரூரமாக வேட்டையாடுவதையும், ஒன்றுக்கொன்று மோசமாக சண்டையிட்டுக் கொள்வதையுமே பெரும்பாலான 'வைல்ட் லைஃப்' தொலைக்காட்சிகள் காண்பிக்கின்றன. அதே சமயத்தில், அந்த விலங்குகளுக்கு மற்றொரு பக்கமும் இருக்கிறது. அதில்தான் அந்த விலங்குகளின் விளையாட்டுத்தனம், கோமாளித்தனத்தை நம்மால் பார்க்க முடியும். விலங்குகளின் இத்தகைய செயல்களை சமூகவலைதளங்கள் தான் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றன என்றால் அது மிகையாகாது.
வேடிக்கையான வீடியோக்கள்
கொடூரமான ஆண் சிங்கங்கள் தனது குட்டிகளுடன் சண்டையிட்டு தோற்பது போல நடிப்பது; பெரிய யானைகள் காட்டுப் பகுதியில் உள்ள சாய்வான மண் தரையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து சறுக்கி விளையாடுவது; தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் புலியை மற்றொரு புலி தண்ணீருக்குள் தள்ளி விடுவது போன்ற வேடிக்கையான வீடியோக்களை பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் நாம் பார்த்திருப்போம்.
'படையப்பா' ஸ்டைல் காட்டிய யானை
அந்த வகையில், இதுபோன்ற ஒரு வேடிக்கையான வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் அது எந்த வனப்பகுதி என்று தெரியவில்லை. அங்கு மூன்று யானைகள் சேர்ந்து மரத்தை ஒடித்து பழங்களையும், காய்கறிகளையும் பறித்து சாப்பிடுகின்றன. அப்போது அவற்றில் ஒரு யானை, அங்கிருந்த பெரிய துணி போன்ற ஒன்றை எடுத்து ஸ்டைலாக தன் மீதே போட்டுக் கொள்கிறது. இதை பார்க்கும் போது படையப்பா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்வது போன்றே உள்ளது. அந்தப் படத்தில் தனக்கே உரிய ஸ்டைலில் துண்டை எடுத்து ரஜினி தன் தோளில் போடுவார். அதுபோலவே தான் இந்த யானையும் தன் மீது துண்டை போட்டு அங்கிருந்து செல்கிறது. ஆனால், அந்த துணி அதன் முகத்தை முற்றிலுமாக மறைத்ததால் எங்கு போகிறோம் எனத் தெரியாமல் பள்ளத்தில் கால் வைத்து 'பொத்' என கீழே விழுந்து பின் எழுந்து செல்கிறது.
தெறிக்கவிட்ட பிஜிஎம்
இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் யாரோ பதிவிட, நம் குசும்புக்கார நெட்டிசன்கள் அதை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளனர். அதாவது, அந்த யானை துணியை எடுத்து போடும் போது படையப்பா பிஜிஎம்-ஐ போட்டு, தெறிக்க விட்டுள்ளனர். சாதாரணமாக இந்த வீடியோ இருந்த போது, அதை யாரும் பெரிய அளவில் பகிரவில்லை. ஆனால் படையப்பா பின்னணி இசையுடன் சரியாக மேட்ச் ஆகியுள்ளதால் இந்த வீடியோ தற்போது ட்ரெண்டிங் ஆகியுள்ளது.