கன்ஃபார்ம்.. இரட்டை இலை சின்னம் முடக்கம்! ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை ஓபிஎஸ் அணியும் அறிவித்தது!
ஈரோடு கிழக்கில் அதிமுக ஓபிஎஸ் அணியும் போட்டியிடுவதால் இரட்டை இலை முடக்கப்பட இருக்கிறது.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் ஓபிஎஸ் அணியும் வேட்பாளரை அறிவித்துவிட்டது. ஏற்கனவே அதிமுகவின் இபிஎஸ் அணியும் வேட்பாளரை அறிவித்தது. இதனால் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னம் முடங்குவது உறுதியாக உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே அதிமுகவின் இரு கோஷ்டிகளும் தமிழ்நாடு பாஜக தலைமையகமான கமலாலயத்துக்கு படையெடுத்தன. இரு கோஷ்டிகளும் பாஜகவின் ஆதரவை கேட்டன.
பின்னர் அதிமுகவின் இபிஎஸ் கோஷ்டியானது பாஜக வேட்பாளரை நிறுத்தினால் ஆதரவு என கூறியது. அதேபோல் பாஜகவுக்கு தேர்தல் பணி செய்ய 118 பேர் கொண்ட பணிக்குழுவை அமைத்தது. இதனால் அதிமுக, பாஜக கூட்டணியில் எந்த கட்சி போட்டியிடும் என்கிற குழப்பம் இருந்து வந்தது.
இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக இபிஎஸ் கோஷ்டி வெளியேறிவிட்டது. தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் தனி கூட்டணியையும் அதிமுக இபிஎஸ் அணி உருவாக்கி உள்ளது. இந்த அணியில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய பாரதம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணியின் தேர்தல் பணிமனை இன்று திறக்கப்பட்டது.
இதனையடுத்து தற்போது அதிமுக ஓபிஎஸ் அணியும் வேட்பாளரை அறிவித்துள்ளது. ஆனாலும் பாஜக, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்தால் தமது அணியின் வேட்பாளரை வாபஸ் பெறுவோம் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் பாஜக, அதிமுக ஓபிஎஸ் அணி, புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் இபிஎஸ், ஓபிஎஸ் இரு கோஷ்டிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இரு அணிகளுமே அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை உரிமை கோருகின்றன. இது தொடர்பாக ஏற்கனவே அதிமுக இபிஎஸ் அணி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது. ஆனால் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பதை ஏற்க மறுத்து இரட்டை இலை சின்னத்தை வழங்க மறுத்தது. இதனால் உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு இடையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இந்த மனு மீது தேர்தல் ஆணையம், ஓபிஎஸ் அணி ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் அணி, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி பதில் மனுவைத் தாக்கல் செய்திருக்கிறது.
இதுவரையில் அதிமுகவின் இந்த அணி மோதல்கள், அணிகளின் வேட்பாளர்கள் தொடர்பாக பாஜக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இப்போது அதிமுகவின் இரு அணிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன; இரண்டு அணிகளுமே இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோருகின்றன. இரு அணிகளுமே தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்திலும் உரிமை கோரி நிற்கின்றன. உச்சநீதிமன்றத்தில் வரும் 3-ந் தேதி இந்த வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது. இப்பின்னணியில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் சூழ்நிலையே உருவாகி உள்ளது என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள். ஏற்கனவே ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது இதேபோல் அதிமுக பிளவுபட்டது. அப்போதும் இரட்டை இலை சின்னம் முடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.