ஈரோடு கிழக்கு பிப்.5-ல் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் போட்டி?
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறும் என்றும் பிப்ரவரி 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 4 ஆண்டுகளில் 2-வது முறையாக இடைத்தேர்தலை சந்திக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் போட்டியிடக் கூடும் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.
2008-ம் ஆண்டுதான் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி உருவாக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி 2011-ல் முதல் தேர்தலை சந்தித்தது. அப்போது மறைந்த விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக களத்தில் செல்வாக்கு செலுத்திய காலம். அத்தேர்தலில் தேமுதிகவின் விசி சந்திரகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார், தற்போதைய அமைச்சரான முத்துசாமியை தோற்கடித்தார் விசி சந்திரகுமார்.

2016 தேர்தலில் அதிமுக வெற்றி
இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி 2-வது முறையாக 2016 சட்டசபை தேர்தலை எதிர்கொண்டது. அந்த தேர்தலில் மக்கள் தேமுதிக என்ற பெயரில் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருந்த சந்திரகுமார் போட்டியிட்டார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. 2016 சட்டசபை தேர்தலில் அதிமுகவின் கேஎஸ் தென்னரசு வெற்றி வாகை சூடினார்.
திருமகன் ஈவெரா, ஈவிகேஎஸ் இளங்கோவன்
2021-ம் ஆண்டு 3-வது முறையாக ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தந்தை பெரியார் குடும்பத்தைச் சேர்ந்த திருமகன் ஈவெரா, காங்கிரஸ் வேட்பாளராக களம் கண்டார். இவரது தந்தைதான் மூத்த காங்கிரஸ் தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன். 2021 சட்டசபை தேர்தலில் திருமகன் ஈவெரா வென்று எம்.எல்.ஏ.வானார். ஆனால் திருமகன் ஈவெரா, உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் 2023-ம் ஆண்டு ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவனே களம் கண்டு வெற்றியும் பெற்றார். ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் உடல் நலன் பாதிக்கப்பட்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 4 ஆண்டுகளில் 2 வதுறையாக பிப்ரவரி 5-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ந் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - காங்கிரஸ் வேட்பாளராக சஞ்சய் சம்பத்?
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்குதான் வாய்ப்பு தர வேண்டும் என காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகனாகிய சஞ்சய் சம்பத், கடந்த முறையே தேர்தலில் நிற்க விருப்பம் தெரிவித்திருந்தார். இந்த முறை சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு தர வேண்டும் என ஈரோடு காங்கிரஸ் நிர்வாகிகள் தீர்மானமும் நிறைவேற்றி இருந்தனர். இதனால் இந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட வாய்ப்புகள் அதிகம் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications