ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்..அதிமுக வேட்பாளர் யார்..பரபர ஆலோசனையில் இபிஎஸ்..என்ன செய்வார் ஓபிஎஸ்
பல மணி நேரம் ஆலோசனை நடத்தியும் வேட்பாளர் யார் என்று முடிவு எட்டப்படாமலேயே எடப்பாடி பழனிச்சாமியின் ஆலோசனை கூட்டம் நிறைவடைந்து விட்டது.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான அணியினர் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பல மணி நேரம் ஆலோசனை நடத்தியும் வேட்பாளர் யார் என்று முடிவு எட்டப்படாமலேயே எடப்பாடி பழனிச்சாமியின் ஆலோசனை கூட்டம் நிறைவடைந்து விட்டது. தேர்தல் பணிக்குழுவினருடன் இன்று ஆலோசனை நடத்தி வேட்பாளரை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி அறிவித்தார். அதே போல் ஓ.பி.எஸ்.சும் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவோம் என்று அறிவித்து உள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா எதிர்பாராத வகையில் திடீர் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக களமிறங்குகிறார். விசிக,கம்யூனிஸ்ட்டுகள், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஆதரவுடன் பிரச்சாரம் செய்து வருகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன். மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனும் நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக கூறி ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை கொடுத்து வலுப்படுத்தியுள்ளார்.
தேமுதிக தனியாக வேட்பாளரை களமிறக்கியுள்ளது. அதேபோல நாம்தமிழர் கட்சியும் தனியாக போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. பலமுனை போட்டி நிலவும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணியாகவும் ஓ.பன்னீர் செல்வம் அணி தனியாகவும் போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஏற்கனவே காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. தொகுதியை எப்படியும் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்தையும் துவக்கி விட்டது திமுக. வலிமை வாய்ந்த தேர்தல் பணிக்குழுவையும் அறிவித்துள்ளது. திமுக சார்பில் தேர்தல் பணிக்குழுவில் கே.என்.நேரு, எஸ்.முத்துசாமி, எ.வ.வேலு, கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசன், அர.சக்கரபாணி, மு.பெ. சாமிநாதன், வி.செந்தில்பாலாஜி ஆவடி சா.மு.நாசர், கயல்விழி செல்வராஜ், அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்ட பல அமைச்சர்களுடன் பெரும்படையை களமிறக்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதற்கு இணையாக வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ள எடப்பாடி பழனிச்சாமி 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அறிவித்துள்ளார். தமிழ்மகன் உசேன்,கே.பி.முனுசாமி,திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், முக்கிய நிர்வாகிகள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் மற்றும் மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், புகழேந்தி, மருது அழகுராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், 87 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திப்போம் என அழைத்து வருகிறார் ஓ.பன்னீர் செல்வம். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தயாராக இல்லை.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுவை அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் . முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 106 பேர் கொண்ட தேர்தல் பணி குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தலைமையில் தமிழ் மகன் உசேன் , கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் , பொன்னையன், தம்பிதுரை, தங்கமணி, வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் ,ஜெயக்குமார் ,சி.வி சண்முகம், செம்மலை ,தளவாய் சுந்தரம், வளர்மதி, செல்லூர் ராஜு தனபால், கே.பிஅன்பழகன், காமராஜ், ஓ.எஸ். மணியன் , கோகுல இந்திரா, சின்னசாமி, சி.விஜயபாஸ்கர் , கடம்பூர் ராஜு , ஆர்.பி. உதயகுமார், ராஜேந்திர பாலாஜி , பெஞ்சமின் , கருப்பசாமி பாண்டியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, உடுமலை ராதாகிருஷ்ணன், ஜக்கையன் , வேணுகோபால், சேவூர் எஸ்.ராமச்சந்திரன் , ராஜன் செல்லப்பா, பாலகங்கா, வைகைச் செல்வன் , செல்வராஜ், மோகன் , கமலக்கண்ணன், ராஜு , விஜயகுமார் , சிவபதி, சொரத்தூர் ராஜேந்திரன் , முக்கூர் சுப்பிரமணியன், செல்ல பாண்டியன், தாமோதரன் உள்ளிட்ட 106 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக தரப்பில் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி தனித்தனியாக உள்ளதாலும், இரட்டை இலை சின்னம் இல்லாத காரணத்தினாலும் தேர்தலில் போட்டியிட அதிமுக நிர்வாகிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் வேட்பாளர் யார் என்று அறிவிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.
வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் ஓரிரு நாட்களில் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் வேட்பாளராக களத்தில் இறக்குவது தொடர்பாக நிர்வாகிகளை சமாதானப்படுத்துவதற்காக எடப்பாடி பழனிசாமி நேற்று காலை ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன், ராமலிங்கம் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், அதிமுகவுக்கு ஏற்படும் பின்னடைவு பற்றி நிர்வாகிகள் எடப்பாடியிடம் விளக்கி கூறினர்.
அனைவரையும் சமாதானப்படுத்திய எடப்பாடி பழனிசாமி, இரட்டை இலை சின்னத்திற்கு சிக்கல் எழுந்துள்ள நிலையில் இந்த தேர்தலில் அதிமுக நிச்சயமாக போட்டியிட வேண்டிய அவசியம் உள்ளது. இதனால் தகுதியான வேட்பாளரை தேர்வு செய்து நிறுத்த நிர்வாகிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
ஏழுமணி நேரத்திற்கு மேலாக நேற்று ஆலோசனை நடத்திய நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி இன்றும் ஆலோசனை நடத்த உள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி இன்று அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதே நேரத்தில் ஒற்றுமையே வலிமை என்று கூறி வரும் ஓ.பன்னீர் செல்வம் என்ன செய்யப்போகிறார் என்பது யாராலும் கணிக்கமுடியாத ஒன்றாக உள்ளது.