ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளரை ஆதரிப்போம்- புதிய நீதி கட்சி அறிவிப்பு ஏன் முக்கியமானது?
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை நிறுத்தினால் ஆதரிப்போம் என புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார். புதிய நீதிக் கட்சியானது ஈரோடு கிழக்கு தொகுதியில் கணிசமான வாக்காளர்களாக உள்ள செங்குந்த முதலியார்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற கட்சி என்பதால் ஏ.சி.சண்முகத்தின் அறிவிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் தமிழகத்தில் அனல் பறக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் மார்ச் 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸின் திருமகன் ஈவெரா திடீரென காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால் திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவரும் திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடலாம் என கூறப்பட்டது. ஆனால் மற்றொரு மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட தாம் வாய்ப்பு கேட்டுள்ளதாக கூறியுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் யார்? இன்றும் பரபர ஆலோசனை!
காங்கிரஸுக்கு எதிராக களமிறங்குவதற்கு அதிமுகவின் இபிஎஸ் கோஷ்டி தயாராக உள்ளது. அதிமுக கூட்டணியில் இத்தொகுதியில் கடந்த முறை தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டது. ஆனால் இபிஎஸ் கோஷ்டி வைத்த வேண்டுகோளை ஏற்று அதிமுக இபிஎஸ் கோஷ்டிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் அதிமுக ஓபிஎஸ் கோஷ்டி, பாஜக வேட்பாளரை நிறுத்தினால் ஆதரிப்போம் என்கிறது. அத்துடன் இரட்டை இலை சின்னத்தைப் பெற்று வேட்பாளரை நிறுத்த முடியுமா? என கணக்குப் போடுகிறது ஓபிஎஸ் கோஷ்டி.
அதிமுகவின் இரண்டு கோஷ்டிகளுக்கு நடுவே பாஜக வேட்பாளரை நிறுத்துவது குறித்து பரிசீலனை செய்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜக வேட்பாளரை நிறுத்தினால் ஆதரிக்க தயார் என புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் கொங்கு வேளாள கவுண்டர்கள் பிரதான வாக்காளர்கள். அதேபோல செங்குந்த முதலியார்களும் மிக முக்கியமான வாக்கு வங்கி. ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக 2011-ல் வெற்றி பெற்றது. இதற்கு காரணம் தேமுதிக வேட்பாளராகப் போட்டியிட்ட சந்திரகுமார், செங்குந்த முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். பின்னர் சந்திரகுமார் திமுகவில் இணைந்தார்.
கொங்கு வேளாள கவுண்டர்களும் செங்குந்த முதலியார்களும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதியில் செங்குந்த முதலியார்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற புதிய நீதிக் கட்சி பாஜக வேட்பாளருக்கு ஆதரவு என அறிவித்திருக்கிறது. இது பாஜகவுக்கு மிகப் பெரும் பலமாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.