என்னால் உங்ககூட விவாதம் நடத்த முடியாது... துரைமுருகனிடம் சரண்டரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன்..!
சென்னை: சட்டப்பேரவையில் அண்ணா பெயர் தொடர்பாக அவை முன்னவர் துரைமுருகன் சுட்டிகாட்டிய தவறை ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வெ.ரா.திருமகன் ஒப்புக்கொண்டார்.
தனது கன்னிப்பேச்சின் போது அண்ணா பெயரை குறிப்பிட மறந்துவிட்டதாகவும், உங்களை போன்ற அனுபவம் வாய்ந்தவர்களோடு விவாதம் நடத்த தன்னால் இயலாது எனவும் துரைமுருகனிடம் ஈ.வெ.ரா.திருமகன் தெரிவித்தார்.
துரைமுருகனுக்கும், திருமகனுக்கு இடையே நடைபெற்ற இந்தப் பேச்சு அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இளங்கோவன் மகன்
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். முதல்முறையாக தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ள இவர் நேற்று தனது கன்னிப்பேச்சை பேரவையில் பதிவு செய்தார். எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் சரி, யார் முன்னிலையில் இருந்தாலும் சரி இவரது தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மனதில் தோன்றியதை துணிச்சலாக பேசக்கூடியவர். அதேபோல் விவாதத்திலும் அனல் பறக்க கருத்துக்களை பதிவு செய்பவர்.

துரைமுருகன்
இந்நிலையில் அவரது மகனான ஈ.வெ.ரா.திருமகன், சற்று கூச்ச சுபாவம் உடையவராக இருக்கிறார். முதலமைச்சர், அமைச்சர்கள், மற்றும் அனுபவம் வாய்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கன்னிப்பேச்சை பதிவு செய்த இவர், ஓமந்தூரார் ராமசாமி, காமராஜர், கலைஞர் போன்றோர் எல்லாம் அலங்கரித்த பேரவையில் நானும் இருக்கிறேன் என நினைக்கும் போது பெருமைப்படுகிறேன் எனக் குறிப்பிட்டார். இவரது பேச்சை கூர்மையாக கவனித்த துரைமுருகன், அவர் முழுமையாக பேசி முடித்த பிறகு திருமகனை நோக்கி ஒரு கேள்வியை எழுப்பினார்.

சம்பத் பேரன்
ஈ.வி.கே.எஸ்.சம்பத்தின் பேரனான நீங்கள் முதல்முறையாக கன்னிப்பேச்சு பேசுவதால் நான் குறுக்கிடவில்லை. பேசும்போது ஓமந்தூரார் ராமசாமி மற்றும் பெருந்தலைவர் காமராஜர், ஆகியோரது பெயர்கள் உங்களுக்கு நினைவு வந்திருக்கிறது. ஆனால் அண்ணா பெயர் நினைவுக்கு வரவில்லையே. ஞாபக மறதியால் அண்ணாவின் பெயரை உறுப்பினர் விட்டாரா அல்லது வேண்டும் என்று விட்டாரா எனத் தெரியவில்லை என்றார் துரைமுருகன்.

அண்ணா பெயர்
அண்ணாவின் பெயரை உறுப்பினர் மறதியால் விட்டிருந்தால் மன்னித்துவிடலாம் இல்லையென்றால் இது விவாதத்துக்கு உரியது, எப்படி வசதி என தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் வினவ, சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் செல்வப்பெருந்தகை எழுந்து, கலைஞரை சொன்னால் அண்ணாவை சொல்லியது போல், அண்ணாவை சொன்னால் கலைஞரை சொல்லியது போல் என பதிலளித்தார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

கலகலப்பு
இதனிடையே துரைமுருகனுக்கு பதிலளிக்கும் வகையில் எழுந்த திருமகன், அண்ணாவின் பெயரை தாம் தவறுதலாக விட்டுவிட்டதாகவும், அண்ணா மீது தனக்கு மிகுந்த அபிப்ராயம் உள்ளதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் அண்ணா எழுதிய எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற புத்தகத்தை படித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், உங்களிடம் விவாதம் நடத்தும் அளவுக்கு தனக்கு அனுபவமில்லை என்றும் கூறினார். இந்த நிகழ்வு பேரவையை கலகலப்பாக்கியது.












Click it and Unblock the Notifications