அடேங்கப்பா.. பயங்கர கான்ஃபிடன்ஸ்! "இன்று தேர்தல் நடந்தாலும்..” ஓபிஎஸ் வாதத்தால் அதிர்ந்த எடப்பாடி!
சென்னை : அதிமுகவின் தலைமைப் பதவிக்கு இப்போது தேர்தல் நடைபெற்றாலும் நான் தான் கட்சியின் ஒற்றைத் தலைமையாக வருவேன், ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவு எனக்கு மட்டுமே உள்ளது என உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது வழக்கறிஞர் வாயிலாக தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த பயங்கர நம்பிக்கை அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வழக்கின் விசாரணையை ஜனவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று நடைபெற்ற விசாரணையின்போது ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்பதை வலியுறுத்தும் வாதங்களை முன்வைத்தது. எம்.ஜி.ஆர் வகுத்த கட்சி விதிகளை அவசர கதியில் ஈபிஎஸ் தனது சுயநலத்திற்காக மீறி விட்டதாகவும் குற்றம்சாட்டியது ஓபிஎஸ் தரப்பு.

பரபர வாதம்
கடந்த ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்தார். இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் அமா்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. நேற்றும் இன்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் பரபரப்பான வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ரூல்ஸை மீறிட்டாங்க
இன்று விசாரணை தொடங்கியவுடன், கடந்த ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுக் கூட்டம் கட்சி விதிகளுக்கு விரோதமானது எனக் கூறி பல்வேறு வாதங்கள் ஓபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டன. "எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு தனிப்பட்ட முறையில் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு அதிகாரம் இல்லை, வழக்கமான பொதுக்குழு கூட்டங்களுக்கும், சிறப்பு பொதுக்குழு கூட்டங்களுக்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது. அவை அதிமுகவின் கட்சி விதிமுறைகளிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது" என்று ஓபிஎஸ் தரப்பு வாதங்களை முன்வைத்தது. அதிமுக பொதுக்குழு கூட்டம் எவ்வாறு அறிவிக்கப்பட வேண்டும் என கட்சி விதிகளில் கூறப்பட்டுள்ளதை விளக்கி, அவ்வாறு எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழுவிற்கு அழைப்பு விடுக்கவில்லை என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அவசர கதியில் நோக்கத்தையே சிதைச்சிட்டார்
மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பில் இருந்த பல முக்கியமான அம்சங்களை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு கணக்கில் கொள்ளாமலேயே விட்டுவிட்டதாகவும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், திமுகவிலிருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் மூலமாக வெளியேற்றப்பட்டதால்தான் அதிமுக என்ற தனிக்கட்சியை எம்ஜிஆர் ஆரம்பித்தார், அந்த பொதுக்குழு கூட்டம் அவருக்கு கசப்பான அனுபவமாகவே இருந்தது, எனவேதான் எம்.ஜி.ஆர், எப்போதும் கட்சி முடிவுகளை அடிப்படைத் தொண்டர்கள் மூலமாகவே எடுக்க வேண்டும் என்பதை விரும்பினார். அதன் அடிப்படையிலேயே கட்சி விதிகளையும் அவர் அமைத்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பு அவசர அவசரமாக அதிமுகவின் அடிப்படை நோக்கத்தையே மாற்றி விட்டது என ஓபிஎஸ் தரப்பினர் வாதங்களை எடுத்து வைத்தனர்.

லைவ்
தொடர்ந்து, ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில், திடீரென ஒருவர் மைக்கின் முன்பாக வந்து, தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுகிறது எனச் சொல்லிவிட்டு அதனை பொதுக்குழு உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொண்டதாக அறிவித்தார்கள், எந்தக் கட்சியிலும் பொதுக்குழு இப்படி நடைபெறாது, எடப்பாடி தரப்பினர் உள்நோக்கத்தோடு இவ்வாறு செய்தனர் எனக் கூறிய ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், இவை அனைத்தும் அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரலை செய்யப்பட்டுள்ளது என்றும் இது அதிகார துஷ்பிரயோகம் என்றும் வாதிட்டார்.

இப்போது தேர்தல் நடந்தாலும்
மேலும் ஒரு முக்கியமான வாதத்தையும் ஓ.பன்னீர்செல்வம் தனது வழக்கறிஞர் மூலமாக சுப்ரீம் கோர்ட்டில் முன்வைத்தார். அதாவது, "இன்று தேர்தல் நடைபெறுகிறது என்றாலும் கூட நான் தான் வெற்றி பெற்று அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக வருவேன், கட்சிக்கு பலமுறை நெருக்கடி ஏற்பட்டபோது முன்னின்று அதனை சமாளித்தேன். ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவு எனக்கு மட்டுமே உள்ளது" என்று தமது வழக்கறிஞர் மூலம் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும், ஒரு தனி மனிதனின் சுயநலத்திற்காகவும் பதவி வெறிக்காகவும் கட்சி பலியாக்கப் பார்க்கிறார்கள் என்ற தங்களின் ஆதங்கத்தையும் ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைத்தது.

அப்படிப்பட்டவர்
மேலும், ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக செயல்பட்டு 3 முறை முதலமைச்சர் பதவிக்கு வந்ததோடு அதிமுகவின் ஒன்றரைக் கோடி தொண்டர்களின் நம்பிக்கையைப் பெற்றவர் ஓபிஎஸ் என்றும் அத்தகைய ஒருவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து கூட நீக்கி இருக்கிறார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மீது ஓபிஎஸ் வழக்கறிஞர் குற்றம்சாட்டினார். இன்றுடன் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணை ஜனவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நேரம் எதுவும் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருப்பதால் ஜனவரி 10 அன்றும் தீர்ப்பு அளிக்கப்படாது என்றே தெரிகிறது.

ஓபிஎஸ்ஸின் அதீத நம்பிக்கை
ஈபிஎஸ் தரப்பினர், பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழியவும், வழிமொழியவும் என்ற விதியை உருவாக்கிய நிலையில், அதற்கு எதிராக வாதங்களை முன்வைத்த ஓபிஎஸ், இப்போது தேர்தல் நடந்தாலும் நானே ஒற்றைத் தலைமையாக வருவேன் என சுப்ரீம் கோர்ட்டில் வாதத்தை முன்வைத்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி, தன்னிடமிருந்து கட்சியை அபகரிப்பதற்காகவே திட்டமிட்டு விதிகளை திருத்தம் செய்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் நிறுவும் வகையிலேயே இன்றைய வாதங்கள் அமைந்திருந்தன. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அமர்வும் இதனை கவனமாக உற்று நோக்கி இருப்பதால், 10ஆம் தேதி ஈபிஎஸ் தரப்பு, ஓபிஎஸ் தரப்பின் வாதங்களை அடித்து நொறுக்குமா என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது.












Click it and Unblock the Notifications