“இறைவன் முன்பு அனைவரும் சமம்”.. நீதிமன்ற உத்தரவை வரவேற்ற அமைச்சர் சேகர்பாபு!
சென்னை: "இறைவன் முன்பு அனைவரும் சமம். இந்த அரசு அதற்காகவே செயல்பட்டு வருகிறது" என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி நின்று பக்தர்கள் வழிபாடு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் பி.என்.கே. கார்டனில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகள் குறித்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வது என்பது காலம் காலமாக உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த போராட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதி வரவேற்கத்தக்கது.
இறைவன் முன்பு அனைவரும் சமம் என்பதை நிரூபிக்கின்ற ஆட்சியாக திராவிட மாடல் அரசை முதலமைச்சர் முன் நிறுத்துவார். திமுக ஆட்சிக்கு வந்த பின் 18 பெண் ஓதுவார்கள் இதுவரை நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஓதுவார் பயிற்சி பள்ளிகளை மேம்படுத்தி ஆண்டு ஒன்றுக்கு 80 முதல் 100 ஓதுவார்கள் பயிற்சி முடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எங்கெல்லாம் திருக்கோயிலில் ஓதுவார் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறதோ அங்கெல்லாம் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் 100 நபர்களுக்கு குறையாமல் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர்க்கைக்கான முயற்சிகளை அறநிலையத்துறை விரைவுப்படுத்தியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனக சபையில் அதிக எண்ணிக்கையில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதி அளிப்பதற்கு மேற்கொள்ள உள்ள ஏற்பாடுகள் குறித்த விவரங்களை தெரிவிக்கும்படி பொது தீட்சிதர்கள் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கனக சபையில் ஒரே வழியைப் பயன்படுத்துவதற்கு பதில், மற்றொரு வழியை அமைப்பது குறித்தும் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது சென்னை ஐகோர்ட். இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை கருத்து தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications