அதிமுக உட்கட்சி தேர்தல்.. 'திடீரென உள்ளே புகுந்த சமூக விரோதிகள்..' ஜெயக்குமார் பரபர குற்றச்சாட்டு
சென்னை: சமூக விரோதிகள் உள்நோக்கத்துடன் கட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு கேட்டு பிரச்சினை செய்வதாகவும் இதனால் உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அதிமுகவின் முக்கிய பொறுப்புகளான ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்குக் கடந்த 2ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்பு மனுக்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிட விரும்பி, சிலர் வேட்புமனு கேட்டதாகவும் இதனால் அதிமுக தலைமை அலுவலகத்தில் திடீரென கைகலப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.
உபி-இல் அமையும் மெகா தொழிற்சாலை.. விரைவில் தொடங்கும் ஏகே 203 துப்பாக்கி உற்பத்தி.. ஏன் முக்கியம்?
சமூக விரோதிகள்
இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அதிமுக கட்சியில் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத சிலர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்புமனு கேட்டு பிரச்சனையில் ஈடுபடுகின்றனர். உள் நோக்கத்துடன் செயல்படும் சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல் ஆணையரிடம் புகார்
தேர்தல் அமைதியான முறையில் நடக்கச் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற உரியப் பாதுகாப்பினை அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளோம். அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் அதிமுக கட்சியைச் சாராதவர்கள் பிரச்சனை செய்கிறார்கள். எனவே அதிமுக தலைமை அலுவலகத்துக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளோம்"என்றார்.
அடிதடிக்கு நாங்கள் பொறுப்பில்லை
மேலும் அதிமுக அலுவலக வளாகத்தில் தொண்டர்களால் ஒருவர் தாக்கப்பட்டது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஜெயகுமார், "அலுவலக சாலைகளில், வளாகங்களில் நடக்கும் பிரச்சனைகளுக்கு நாங்கள் பொறுப்பு ஆக முடியாது. யாரோ யாரையோ அடிப்பார்கள், சண்டை போடுவார்கள் அதற்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டியது இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
யார் அந்த சமூக விரோதி
வேட்புமனு கேட்டு பிரச்சனை செய்பவர்கள் யார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு நேரடியாகப் பதில் கூறாமல், வெளியாட்கள், சமூக விரோதிகள் வேட்புமனு கேட்டு பிரச்சனை செய்வதாகக் கடைசி வரை பெயரைக் குறிப்பிடாமல் மழுப்பினார். மேலும் தகுதி இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் தகுதி உடைய தொண்டர்கள் யார் கேட்டாலும் வேட்புமனு அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.