முத்துசாமியிடம் மதுவிலக்குத் துறை பறிப்பு! ஜாமீனில் வந்த 3 நாளில் செந்தில் பாலாஜிக்கு 2 துறைகளா?
சென்னை: அமைச்சர் முத்துசாமியிடம் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, மீண்டும் செந்தில் பாலாஜியிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிறையிலிருந்து வந்த 3 நாட்களில், செந்தில் பாலாஜிக்கு இரு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 2021 ஆம் ஆண்டு கரூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். இவருக்கு திமுகவில் சேர்ந்த சில ஆண்டுகளிலேயே இது போன்ற வாய்ப்பு கொடுக்கப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேல் அவர் அமைச்சரவையிலும் இடம் பெற்றார். அவருக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஒதுக்கப்பட்டது.

இரண்டுமே முக்கியமான பொறுப்புகள். இதில் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அதற்கு பதிலடி கொடுத்துவிட்டு செந்தில் பாலாஜி செயல்பட்டுத்தான் வந்தார். ஒரு முறை அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து செந்தில் பாலாஜியிடம் கேட்ட போது, அவர் அணில்கள் மின்கம்பிகளில் ஓடுவதால் ஆங்காங்கே அறுந்துவிடுகிறது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என அவர் பதில் அளித்தது பேசும் பொருளாக இருந்தது.
இந்த நிலையில் அண்ணாமலையுடன் அவ்வப்போது செந்தில் பாலாஜி மல்லுக்கட்டி வரும் நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். எனினும் அவர் தொடர்ந்து அமைச்சராகவே பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில் ஜாமீன் பெறுவதற்காக தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமிக்கும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 450 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்த நிலையில் செந்தில் பாலாஜிக்க கடந்த வியாழக்கிழமைதான் ஜாமீன் கிடைத்தது.
இதையடுத்து அவருக்கு அமைச்சராவதில் எந்த தடையையும் கோர்ட் விதிக்காததால் அவர் விரைவில் அமைச்சரவையில் இடம் பெறுவார் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதாவது 3 பேர் அமைச்சரவையிலிருந்து நீக்கிவிட்டு 4 பேரை புதிதாக சேர்த்தனர். அந்த 4 பேரில் செந்தில் பாலாஜியும் ஒருவர். அவருக்க மின்சாரத் துறை ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையும் அளிக்கப்பட்டது.
அதாவது முத்துசாமியிடம் இருந்த மதுவிலக்கு துறை பறிக்கப்பட்டு செந்தில் பாலாஜிக்கே வழங்கப்பட்டது. இந்த துறைகள் இரண்டுமே முக்கியமானது. டென்ஷனை கொடுக்கக் கூடியது. அப்படியிருக்கும் போது இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒருவருக்கு எதற்காக இரு முக்கிய பொறுப்புகளை கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications