ஆன்லைன் ரம்மி எனும் சிலந்தி வலை.. சிக்கியவர்கள் மீளாமல் போக என்ன காரணம்..? விளக்கம் தரும் நிபுணர்கள்
சென்னை : ஆன்லைன் ரம்மி விளையாடுபவர்கள் அதில் இருந்து மீள முடியாமல் தவித்து வரும் நிலையில், ஆன்லைன் சூதில் வெல்வது மிகமிகக் கடினம் எனவும், அதற்காகவே அதன் RNG (Random Number Generator) எனப்படும் அல்காரிதம் அதிநுணுக்கமாக உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறும் நிபுணர்கள், முறையான மனநல சிகிச்சை இன்றி இந்த மயக்கத்திலிருந்து தப்புவது கடினம் எனக் கூறியுள்ளனர்.
பணத்திற்கு ஆசைப்பட்டு அல்லது வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என நினைத்து அறியாமையில் மூழ்கி மன நோயாளிகளாக மாறி தற்கொலை செய்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
விட்டதை பிடித்து விடலாம் என நினைத்து கடனுக்கு மேல் கடன் வாங்கி கடனில் மூழ்கி வேறு வழியின்றி தற்கொலை முடிவை தேர்வு செய்யும் அவலநிலை நீடிக்கத்தான் செய்கிறது. ஆன்லைன் ரம்மி, ட்ரேடிங்க் ஆப்கள் தான் இந்த அவலநிலைக்கு காரணம். இதனையடுத்து எழுந்த எதிர்ப்புகள் மற்றும் கோரிக்கைகளால் தடை கொண்டுவரப்பட்டது.

ஆன்லைன் ரம்மி எனும் அரக்கன்
கடந்த ஆட்சிக்காலத்தில் ஆன்லைன் ரம்மி தடை செய்யும் வகையில் சட்டம் இயற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டன. ரம்மி நிறுவனங்கள் மேலமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த சட்டத்திற்கு தடைபெற்றனர். இதையடுத்து மீண்டும் தமிழகத்தில் நுழைந்தது ஆன்லைன் ரம்மி. அப்போதிருந்து இப்போது வரை பல உயிர்களை தனது கோர பசிக்கு இரையாக்கி வருகிறது என்றே கூறலாம்.

ஆன்லைன் ரம்மியால் தற்கொலை
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட வங்கி ஊழியர் ஒருவர் தனது அழகான மனைவி அன்பான குழந்தைகளை கொடூரமாக கொலைசெய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது ஆன்லைன் ரம்மி எனும் அரக்கன் காரணமாகத்தான். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் சென்னையிலேயே மீண்டும் ஒரு தற்கொலை சம்பவமும் உடனடியாக நிகழ்ந்தது . சென்னை கோயம்பேட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளையாடி லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த தினேஷ் என்ற நபர் மன அழுத்தத்தின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொலை செய்து தற்கொலை
முதல் சம்பவம், பார்க்ளேஸ் வங்கியில் வேலை. ஆண்டுக்கு 28 லட்சம் ரூபாய் சம்பளம். அத்தனை அழகான இரண்டு பிள்ளைகள் என வரம் வாங்கி வாழ்ந்திருந்த வாழ்வை, ஆன்லைன் ரம்மி ஒரு நொடியில் முடித்து வைத்த கொடூரத்தால் மனம் பற்றி எரிகிறது. மற்ற மரணங்கள் போல இதிலும் சூது விளையாட்டாய் தான் ஆரம்பித்திருக்கிறது. பாதியில் விட முடியாமல், நண்பர்களிடத்தில் கடன் பெற்றும் விளையாடியிருக்கிறார். ஒரு கோடிக்கு மேல் இழந்து பரிதவிக்க அப்போது தான் இது மனைவிக்கு தெரிய வந்திருக்கிறது. பிரச்சினை வெடிக்க, கோபத்தில் மொத்த குடும்பத்தையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

மிகமிக கடினம்
ஆன்லைன் சூதில் வெல்வது மிகமிகக் கடினம். அதன் RNG (Random Number Generator) அல்காரிதம் அதிநுணுக்கமாக உருவாக்கப்பட்டது. நியாயமாக இதன் வேலை ரேண்டமாக எண்களை உருவாக்கி அனுப்புவதுதான் என்றாலும், நீங்கள் தோல்வி அடைந்ததும் எவ்வளவு துரிதமாக மற்றுமொரு ஆட்டத்தை ஆரம்பிக்கிறீர்கள், பண இருப்பு கரைந்ததும் எவ்வளவு வேகமாக மீண்டும் ரீசார்ஜ் செய்கிறீர்கள் என்பதையெல்லாம் வைத்து, நீங்கள் அடிமையாகி விட்டீர்களா, இல்லையா என்பதையும் RNG கண்டுகொள்ளும்.

அடிமையாக்கும் ஆப்கள்
அடிமை என்று தெரிந்தால் அதன் அரக்க முகம் வெளிவரும். மிகமிகக் கடினமாகத்தான் கார்டுகளை (எண்களை) வழங்கும். மூன்று அல்லது நான்கு தோல்விகளுக்கு இடையே ஒரு சொற்ப வெற்றியைக் கொடுக்கும். காரணம், இது நியாயமாகத்தான் செயல்படுகிறது, என்னுடைய கெட்ட நேரம் என்று உங்களை நம்ப வைக்கும் உத்தி தான் இது. ஆனால் உண்மையில் நீங்கள் எத்தனை முறை தோல்வி அடைந்தாலும் மீண்டும் வருவீர்கள் என்பதை அது நன்கு அறியும். ஒருவேளை நீங்கள் அன்இன்ஸ்டால் செய்து தப்பித்தாலும், சரியாக மூன்று நாள் கழித்து, போனஸ் பணத்தை க்ரெடிட் செய்திருக்கிறேன் வா என வலை விரிக்கும். ஆகவே அல்காரிதத்தை வென்று பணக்காரனாவது என்பதற்கு வாய்ப்பே இல்லை. இதிலிருந்து மீள வேண்டும் என நினைப்பவர்களுக்கு, முறையான மனநல சிகிச்சை இன்றி இந்த மயக்கத்திலிருந்து தப்புவது கடினம்.

உங்களுக்கு கெட்ட நேரம்
மனதின் ஓரத்தில் இதன் மீதான ஆசை இருந்து கொண்டே இருக்கும். மனைவியுடன் விஷயத்தை சொல்லிவிட்டு ஸ்மார்ட்போனை தூக்கி கடாசி விடுங்கள். நல்ல மனநல மருத்துவரிடம் பேசுங்கள். அதெல்லாம் தேவையில்ல! நான் சும்மா டைம் பாஸுக்கு என்று இன்னும் மழுப்பினீர்கள் என்றால், உங்களுக்கு ஏற்கெனவே கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டது என்றே சொல்ல முடியும். வேறெதுவும் சொல்வதற்கில்லை. தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூது எனும் அரக்கனை தடை செய்தது. நீதிமன்றம் தடையை நீக்கி மீண்டும் உயிர் தந்தது. இதற்கு முன்பான மரணங்களுக்கு விளையாட்டுப் போதை காரணமாக இருக்கலாம். ஆனால் தடை செய்ததை மீண்டும் உயிர்ப்பித்த பின் நிகழ்ந்துள்ள இக்கொடூரத்திற்கு அல்காரிதமோ, ஆன்லைன் சூது மட்டுமோ காரணமல்ல!.. நாமும்தான்.












Click it and Unblock the Notifications