பாஜகவில் இணைந்த பிரபல பின்னணி பாடகரின் மகள்...!
Recommended Video
சென்னை: மறைந்த பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவனின் மகள் பிரஷாந்தி முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
கேரளாவை பூர்வீகமாக கொண்டு மலேசியாவில் பிறந்து வளர்ந்த வாசுதேவன் 1970-களில் சென்னைக்கு வந்தவர். 16 வயதினிலே படத்தில் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என முதல் பாடலை பாடத்தொடங்கிய அவருக்கு அதற்கு பிறகு தமிழக திரைத்துறையில் ஏறுமுகம் தான். ஒரு மகன் இரண்டு மகள்கள் அவருக்கு. அதில் இளையமகள் பிரஷாந்தினி மட்டும் பின்னணி பாடகியாக உள்ளார்.
வாரணம் ஆயிரம் படத்தில் ''முன் தினம் பார்த்தேனே'' பாடலை பாடினார் அல்லவா, அந்த பிரஷாந்தினி தான். இப்போதும் அவர் பல பாடல்களை பாடி வருகிறார். இந்நிலையில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்த பிரஷாந்தினியும், அவரது கணவர் பிரேம்நாத்தும் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர். பிரேம்நாத் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் எக்ஸ்கியூட்டிப் புரோடியூஸராக இருக்கிறார்.
பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் பிடித்ததால் பாஜகவில் இணைந்ததாக பிரஷாந்தினி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பிரஷாந்தினி மற்றும் அவரது கணவர் பிரேம்நாத்திற்கு வாழ்த்துக்கூறிய பொன்.ராதாகிருஷ்ணன், மோடியின் நல்ல திட்டங்களை முடிந்தளவுக்கு அனைவரிடமும் எடுத்துச் சொல்லுங்கள் என அவர்களிடம் கேட்டுக்கொண்டாராம்.
தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில் கட்சி சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.