அது 18 கேரட் தங்கம்யா.. உலகக் கோப்பையை நீங்க எப்படி தொடலாம்? சர்ச்சையில் சால்ட் பே..கடுப்பான மெஸ்ஸி!
சென்னை : கத்தார் நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா கோப்பையை வென்ற நிலையில், கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட துருக்கியைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞரான சால்ட் பே கோப்பையை தொட்டதும் வீரர்களின் பதக்கங்களை கடித்ததும் கடும் கண்டனங்களை பெற்று வருகிறது.
22 ஆவது பிபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த 20ஆம் தேதி கத்தாரில் ஆரவாரமாக தொடங்கி நடைபெற்றது. உலகம் முழுவதிலும் இருந்து 32 அணிகள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டன.
நேற்று முன் தினம் இரவு இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியும் அர்ஜென்டினாவும் மல்லு கட்டின. இந்த போட்டியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் நேரலையில் கண்டு ரசித்தனர்.

மெஸ்ஸி
ஆட்டம் தொடங்கியதில் இருந்தே அர்ஜென்டினாவே களத்தில் ஆதிக்கம் செலுத்தியது. ஐந்தாவது நிமிடத்தில் இருந்தே அந்த அணியின் ஆதிக்கம் தொடங்கிய நிலையில் 21வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு மூலம் அடித்தார். அந்த பெனால்டி வாய்ப்பை பார்ப்பதற்கும் காண கண் கோடி வேண்டும். தொடர்ந்து 36-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவில் இரண்டாவது கோல் விழுந்தது. மெஸ்ஸி ஜூலியன் உள்ளிட்டோர் மிக அருமையாக விளையாடி அந்த கோலை போட்டனர்.

அர்ஜென்டினா
முதல் பாதி ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா இரண்டாவது பாதியிலும் கடும் போட்டி கொடுத்தது. ஆனால் 80வது நிமிடத்தில் திடீரென பிரான்ஸ் அணியின் கை ஓங்கியது. கச்சிதமாக கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பே கோலாக மாற்றினார். அடுத்த 90 வினாடிகளில் மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் இரண்டுக்கு இரண்டு என சமநிலை அடைந்தது. தொடர்ந்து எக்ஸ்ட்ரா டைமிலும் தல ஒரு கோல் அடிக்கப்பட்டது. இதை அடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் அர்ஜென்டினா கோப்பையை வென்றது.

திடீர் சர்ச்சை
இந்த நிலையில் கோப்பையை வென்றதற்கு பின்னால் மைதானத்தில் வெற்றி கொண்டாட்டங்கள் களை கட்டியது. இந்த கொண்டாட்டங்களில் துருக்கியைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞரான சால்ட் பே கலந்து கொண்டார். உலகின் மிகப் பிரபலமான பலரும் சால்ட் பே வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இறைச்சியை பல வழிகளில் சமைத்த பின்னர் அதில் உப்பை வீசும் அழகுக்கு அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் அர்ஜென்டினாவின் வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சால்ட் பே அர்ஜென்டினாவின் கோப்பையை கையில் ஏந்தி புகைப்படம் எடுத்தார்.

சால்ட் பே
மேலும் அங்கிருந்த வீரர்கள் பெற்ற வெற்றி பதக்கங்களையும் அவர் வாயால் கடித்ததாக கூறப்படுகிறது. 18 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட உலக கோப்பையை வென்ற அணி வீரர்கள், அணி தலைவர்கள், அணியின் பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் பிற நாட்டுத் தலைவர்கள் மட்டுமே தொட வேண்டும் என்ற நிலையில் சமையல்காரர் எப்படி இந்த கோப்பையை தொடலாம் என ரசிகர்கள் பலரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடுப்பான மெஸ்ஸி
மேலும் போட்டிக்கு சம்பந்தமே இல்லாத நபரை எப்படி மைதானத்திற்குள் பிஃபா அனுமதித்தது என அந்த அமைப்புக்கும் ரசிகர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர. இந்த நிலையில் அர்ஜென்டினாவின் டீ மரியா உள்ளிட்ட பலருடன் சால்ட் பே புகைப்படம் எடுத்துக் கொண்ட நிலையில் அர்ஜென்டினாவின் கேப்டனான மெஸ்ஸி சமையல் கலைஞர் சால்ட் பேவை புகைப்படம் எடுக்க விடாமல் கடுமையாக நடந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. தேவையில்லாமல் கோப்பையை கையால் தொட்டதால் மெஸ்ஸி கோபப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.












Click it and Unblock the Notifications