ஒரே பாலில் 2 சிக்ஸர் அடித்த எடப்பாடியார்... நேரில் சந்தித்து உருகிய விவசாயிகள்!
சென்னை: விவசாயிகளின் ரூ.12,110 கோடி பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் அறிவித்ததற்கு விவசாய சங்க பிரதிநிதிகள் அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் உள்பட பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி கூறினர்.
சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை தொடர்பாகவும் முதல்வரிடம் சந்தித்து பேசுவோம் என்று அவர்கள் கூறினார்கள்.
அசத்தல் அறிவிப்பு
கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுள்ள 16.43 லட்சம் விவசாயிகளின் ரூ.12,110 கோடி பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு தமிழகம் முழுவதும் விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.. பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்தவர்களும் அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
தி.மு.க குற்றச்சாட்டு
ஆனால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது தேர்தல் நோக்கம் கொண்டது என தெரிவித்துள்ளது. திமுக ஏற்கனவே ஆட்சிக்கு வந்தால் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளது. இதனையே தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்வருக்கு நேரில் நன்றி
இந்த நிலையில் இந்த அசத்தலான வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்ற விவசாய சங்க பிரதிநிதிகள் அவருக்கு நன்றி தெரிவித்தனர். தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் உள்பட பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் முதல்வரை சந்தித்து நன்றி கூறினர்.
எட்டு வழிச்சாலை தொடர்பாக பேசுவோம்
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்கள் கூறியதாவது:- பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம். நிதி நெருக்கடியான காலத்தில் முதல்வர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டது மகிழ்ச்சியாகும். சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை நிறைவேற்றுவது குறித்து மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளதாக கூறுகிறீர்கள். தற்போது ஒரு நல்ல விஷயத்துக்கு முதல்வருக்கு நன்றி கூறியுள்ளோம். எட்டு வழிச்சாலை தொடர்பாகவும் முதல்வரிடம் சந்தித்து பேசுவோம் என்று கூறினார்கள்.