தந்தையர் தினம் 2020 : மீண்டும் அவரே எனக்கு தந்தையாக வேண்டும்!
சென்னை: நமது வாசகர் சரவணன். தனது தந்தை குறித்த மகிழ்ச்சியான கருத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Recommended Video
தந்தையர் தினத்தை முன்னிட்டு என்னுடைய தந்தையை பற்றிய சிறு உரை..
என்னோட பேரு சரவணன். எங்க அப்பா பேரு மாணிக்கவாசகம். பெயருக்கு ஏற்றார் போல பக்தியில் சிறந்து விளங்குபவர். இன்றைக்கும் எங்க ஊரில் மணி சாமி என்று சொன்னால் உடனே அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் எங்க அப்பா குருசாமி.

எங்க அப்பா ஒரு டாக்டரோ அல்லது அரசு அதிகாரியோ அல்ல. அவர் ஒரு டீ மாஸ்டர். தினமும் வேலைக்கு சென்றால் தான் சாப்பாடு நான் சிறுவனாக இருக்கும்போது. அந்த காலத்திலேயே (2000 ஆம் ஆண்டு வாக்கில்) பள்ளி செல்லும்போதோ, வெளியூர்களுக்கு செல்லும்போதோ பாக்கெட் மணி கொடுத்து அனுப்புவார். யாருக்கு கிடைப்பார்கள் இப்படி ஒரு அப்பா..
இது வரையில் என்னை அடித்ததே கிடையாது (அதற்கும் சேர்த்து எங்க அம்மாவிடம் நிறைய வாங்கியது உண்டு). படித்தது பத்தாம் வகுப்பு வரையில். ஆனால் என் அப்பாவுக்கு அறிவு அதிகம். அவருக்கு தெரியாத விஷயங்கள் கம்மி. இன்றளவும் தினமும் செய்தித்தாள் வாசிப்பதை நிறுத்தாதவர்.
பெரியதாக எதற்கும் அலட்டிக்கொள்ளமாட்டார். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவர். யாரைப்பற்றியும் எப்போதும் புறம் பேசாதவர் (அவரின் சிறந்த குணங்களில் இதுவும் ஒன்று).
தன்னை மதிப்பவரை பெரிதும் மதிப்பவர். மதியாதவரை ஏறெடுத்தும் பார்க்காதவர். தேவை இன்றி அவர் சண்டையிட்டு நான் பார்த்தது இல்லை. அவரின் வாழ்க்கையில் நான், என் அம்மா, தங்கை இவர்களே உலகமாய் இருக்கின்றோம் எப்போதும். வசதி இல்லையென்றாலும் கூட அன்பில் எப்போதும் குறை வைத்ததில்லை.
எல்லாருக்கும் அவர்கள் தந்தை தான் ஆதர்ச நாயகன் சிறுவயதில்.ஆனால் எனக்கோ இன்று வரை என் தந்தையே ரோல் மாடல்.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. சிறுவயதில் அவர் சொல்வதை கேக்காமல் பட்டு திருந்தியது உண்டு. பருவ வயது வந்தபின் அவரின் பேச்சினை பெரும்பாலும் மீறியதில்லை.
இன்னொரு பிறவி உண்டென்றால் என் தந்தையும், தாயுமே என்னை மீண்டும் ஈன்றெடுக்க வேண்டும் என்பதே என் அவா..
என் பெற்றோர் நீண்ட காலம் வாழ வாழ்த்துங்கள் !! நன்றி !!
- சரவணன் மாணிக்கவாசகம்
நமது இன்னொரு வாசகர் ரவிக்குமார் விஜயக்குமார்.. தனது தந்தை பற்றி அனுப்பியுள்ள பதிவு...
எனது பெயர் ரவிக்குமார் விஜயக்குமார். நான் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறேன். எம்பிஏ படித்துள்ளேன். எனது தந்தையின் வருமானத்தை மட்டுமே நம்பியிருந்தது எனது குடும்பம். அப்போதெல்லாம் எனது தந்தைக்கு தினசரி 7 ரூபாய் மட்டுமே. அப்போது நான் 4வதோ அல்லது 5வதோ படித்துக் கொண்டிருந்தேன். எனது தந்தை சரியாக சாப்பிடக் கூட மாட்டார். நாங்கள் மொத்தம் 6 பேர் குடும்பத்தில். எனது அப்பா சம்பாத்தியம் மட்டுமே.
அவரது தினசரி சாப்பாடு என்பது டீ மட்டுமே. அதை மட்டுமே அவ்வப்போது குடித்துக் கொள்வார். ராத்திரி நெடு நேரம் கழித்துதான் வீடு திரும்புவார். அந்த நிலையிலும் கூட மறக்காமல் பிள்ளைகளுக்கு ஏதாவது நொறுக்குத் தீனி வாங்கி வருவார். எங்கள் வீட்டில் யாருமே சரியாக படிக்க முடியவில்லை. நானும் எனது தங்கையும் மட்டுமே கல்லூரி வரை போனவர்கள். இப்போது எங்களது அப்பாவுக்கு வயதாகி விட்டது. உடம்புக்கும் முடியவில்லை. என்னை தன்னம்பிக்கை மிக்கவனாக எனது தந்தை உருவாக்கியுள்ளார். அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்று அடிக்கடி சொல்வார். எனது தந்தையை நினைத்துப் பெருமையாக உள்ளது.
பள்ளிக்காலத்தில் எனது தந்தைக்கு என்னால் நிறைய பிரச்சினை. பீஸ் கட்ட முடியாது. குடும்பச் சூழல் அப்படி. ஆனாலும் எதையும் என்னிடம் வெளிப்படுத்த மாட்டார். மனசுக்குள்ளேயே போட்டு வச்சுக்குவார். இப்போதுதான் எனது தந்தை எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை அறிய முடிகிறது. அதுதான் நான் அவரை உயர்வாக நினைக்க முக்கியக் காரணம். எப்போதும் எனது தந்தை மிகவும் சிறப்பானவர். இப்படிப்பட்ட அன்பான, பாசமான தந்தையை கொடுத்த கடவுளுக்கு நன்றி என்று உருக்கமாக கூறியுள்ளார் ரவிக்குமார் விஜயக்குமார்.
ரவிக்குமார்.. உங்களுக்கும், உங்களது அன்புத் தந்தைக்கும் எங்களின் வாழ்த்துகளும் உண்டு.. தந்தையுடன் மகிழ்ந்திருங்கள்.












Click it and Unblock the Notifications