என் வீட்ல நீங்கள் எதையாவது வச்சுட்டு போய்டீங்கன்னா? போலீஸிடம் யூடியூபர் பெலிக்ஸ் மனைவி கேள்வி
சென்னை: யூடியூபர் ஜெரால்டு ஃபெலிக்ஸின் வீட்டில் சோதனை நடத்த சென்ற போது போலீஸாரை உள்ளே விடுவதற்கு வாதம் செய்த அவருடைய மனைவி, நீங்கள் ஏதாவது என் வீட்டில் வச்சிட்டு போய்ட்டீங்கன்னா என கேள்வி எழுப்பினார்.
தமிழக காவல் துறையில் பணியாற்றும் பெண்களை தவறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் தேனியில் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் வந்த போது சவுக்கு சங்கர் பேசிய பேட்டியை ஒளிபரப்பு செய்த யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து கடந்த 10ஆம் தேதி இரவு டெல்லியில் தனிப்படை போலீஸார், பெலிக்ஸை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் திருச்சியில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டார். இதையடுத்து அவரை 3ஆவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் நீதிபதி ஜெயபிரதா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
மேலும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய சவுக்கு சங்கர், கொடுத்த நேர்காணல் பதியப்பட்ட வீடியோ நீக்க வேண்டும் என யூடியூப் நிறுவனத்திற்கு நீதிபதி ஜெயபிரதா உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து பெலிக்ஸை திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் பெலிக்ஸ் வீட்டில் சோதனையிடுவதற்காக நீதிமன்ற உத்தரவுடன் திருச்சி போலீஸார் வந்தனர். காலிங் பெல் அடித்தவுடன் பெலிக்ஸ் மனைவி வெளியே வந்தார். அப்போது அங்கிருந்த போலீஸாரிடம், நீங்கள் யார் என கேட்டார். அதற்கு அவர்கள் நீதிமன்ற உத்தரவை காட்டி வீட்டை சோதனையிட வந்தனர் என தெரிவித்தனர்.
அப்போது பெலிக்ஸ் மனைவி, நான் நேற்று திருச்சி சிறைக்கு என் கணவர் பெலிக்ஸை பார்க்க சென்றேன். அங்கு இரவு 10.30 மணி வரை இருந்துவிட்டு நள்ளிரவில் கிளம்பி சென்னை வந்துள்ளேன். நான் வந்து அரை மணி நேரம் கூட ஆகவில்லை, அதற்குள் காலிங் பெல்லை அத்தனை முறை அடித்தால் என்ன அர்த்தம்?
நான் வர லேட்டாகியிருந்தால் என் வீட்டு கதவை உடைத்திருப்பீர்களா? நான் இருப்பது வாடகை வீடு என்றார். அதற்கு அங்கிருந்த போலீஸார், காலிங் பெல்லை அத்தனை முறை அடித்தது நாங்கள் இல்லை. கதவை உடைத்துக் கொண்டெல்லாம் சோதனை இட மாட்டோம். வீட்டில் நீங்கள் இல்லை என்றால் உங்களுக்கு போன் செய்திருப்போம். இப்படி எல்லாவற்றுக்குமே ஒரு நடைமுறை இருக்கிறது என்றார்கள்.
பிறகு கோர்ட் ஆர்டரை பார்த்த பெலிக்ஸ் மனைவி, எத்தனை பேர் என் வீட்டை சோதனையிட உள்ளே செல்ல போகிறீர்கள், நான் உங்களை எல்லாம் சோதனையிட வேண்டும் என கேட்டார். அதற்கு எல்லாரும்தான், நீங்கள் எங்களை சோதனையிட முடியாது என போலீஸார் பதிலளித்தனர். அதற்கு பெலிக்ஸ் மனைவி, எல்லாரையும் அனுமதிக்க முடியாது என்றார்.
அதற்கு போலீஸார், உங்கள் வீட்டிலிருந்து நாங்கள் எதையும் எடுத்து செல்ல மாட்டோம். வழக்கு தேவை என்றால் உங்களிடம் சொல்லிவிட்டுதான் எடுத்துச் செல்வோம் என்றனர். அதற்கு பெலிக்ஸ் மனைவியோ, "நீங்கள் எதையாவது வச்சுட்டீங்கன்னா என்ன செய்யுறது. உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை" என்றார்.
அதற்கு போலீஸார், "அப்படியெல்லாம் செய்ய மாட்டோம். நீங்களும் எங்களுடன் இருங்கள்" என போலீஸார் சொன்னதும் அவர்களை உள்ளே விட்டார். அப்போதும் கூட மொத்தமாக வராதீர்கள், ஒவ்வொருத்தராக வாங்க என்றார்.












Click it and Unblock the Notifications