இன்று வங்கிகள் செயல்படுமா? பெங்கல் புயலுக்கு நடுவே வந்த முக்கிய அறிவிப்பு.. மக்களே நோட் பண்ணுங்க
சென்னை: ஃபெங்கல் புயல் காரணமாக இன்று (நவம்பர் 30) ம் தேதி சென்னை உள்பட தமிழ்நாட்டில் வங்கிகள் செயல்படுமா? என்பது பற்றி அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் வெங்கடாசலம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதற்கிடையே தான் தான் வங்கக்கடலில் புதிய புயல் உருவாகி உள்ளது. தொடர்ந்து தாமதமாகி வந்த இந்த புயல் நேற்று உருவானது.
அதன்படி தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு ஃபெங்கல் புயல் உருவானது. இந்த புயல் இன்று (நவம்பர் 30ம்) கரையை கடக்க உள்ளது.

இந்த புயல் இன்று இரவு 9 மணி நிலவரப்படி நாகைக்கு கிழக்கே 240 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 250 கிலோமீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. அதோடு இந்த புயல் 15 கிலோமீட்டர் வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று பிற்பகலில் அதாவது மதிய வேளையில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. அப்போது குறைந்தபட்சம் 60 கிலோமீட்டர் வேகத்திலும், அதிகபட்சமாக 90 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீச உள்ளது.
புயல் கரையை கடக்கும்போது புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் இன்று வங்கிகள் இயங்குமா? என்று பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. அதன்படி ஃபெங்கல் புயல் காரணமாக இன்று வங்கி சேவையில் எந்த பாதிப்பும் இருக்காது. வங்கிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுவையில் ஒரு சில இடங்களில் கனம முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கனமழை வாய்ப்புள்ள மாவட்டங்களில் புயல் பாதிப்பை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்பட 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சென்னை, கடலூர் மாவட்டங்களில் புயல் கரையை கடக்கும்போது பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும்படி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்க்கது.












Click it and Unblock the Notifications