கடன் வாங்காமல் குடும்ப தேவைகளை சமாளிக்க.. நிதிஅமைச்சர் பிடிஆர் சொல்லும் அட்வைஸ்! இதை ஃபாலோ பண்ணுங்க!
சென்னை : உலக சிக்கன நாளையொட்டி தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.
உலக சிக்கன நாள் நாளை (அக்டோபர் 30ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. அதையொட்டி தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயில், ஒரு பகுதியை பாதுகாப்பான வழியில் சேமிப்பது சிறந்தது, முதலீடு செய்த பணத்தை தக்க தருணத்தில் திரும்பப் பெற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அஞ்சலகங்களில் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பிடிஆர்
இதுகுறித்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் , "உலக சிக்கன நாள் அக்டோபர் 30.10.2022 அன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுவதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைவதுடன் என் மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் 1985-ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 30-ஆம் நாள் உலக சிக்கன நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பணம் இருப்பது போல்
"அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்" என்ற குறளில், ஒருவன் தனது செல்வத்தின் அளவை அறிந்து அதற்கு ஏற்றபடி வாழாவிடில் அவன் வாழ்க்கை, செல்வம் இருப்பது போலத் தோன்றினாலும் செல்வம் இழந்து வாழ்க்கை கெடும் என்று திருவள்ளுவர் கூறியதோடல்லாமல் மனித வாழ்க்கையில் சேமிப்பின் முக்கியத்துவத்தை சிறப்பாக ஈரடிகளில் வியாக்கியுள்ளார்.

சேமிப்பு அவசியம்
சிறுகச் சிறுகச் சேமிப்பதன் மூலம் குடும்பத்திற்குத் தேவைப்படும் அவசரத் தேவைகளை, எளிதில் எதிர் கொள்ளலாம். பிள்ளைகளின் படிப்பு, திருமணம், வீடு கட்டுதல் போன்ற செலவினங்களை கடன் வாங்காமல் மேற்கொள்ளலாம். ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயில், ஒரு பகுதியை பாதுகாப்பான வழியில் சேமிப்பது தான் சிறந்தது. மக்கள் தங்களது சேமிப்புத் தொகையை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்தால்தான், அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் அவ்வாறு முதலீடு செய்த பணத்தை தக்க தருணத்தில் திரும்பப் பெற முடியும்.

சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்
இந்த வகையில் அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படும் சிறுசேமிப்புத் திட்டங்கள் பாதுகாப்பானவை. தமிழக மக்கள் அனைவரும் சிக்கனத்தைக் கடைப்பிடித்து சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து உயர்ந்திட இந்த உலக சிக்கன நாளில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

அஞ்சலகங்களில்
நாளை சிக்கன நாளையொட்டி அஞ்சலகங்களில் சிறப்பு அஞ்சல் சேமிப்பு கணக்கு சேகரிப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. எல்லா பிரிவினர், வயதினருக்கு ஏற்ற சேமிப்பு திட்டங்கள் 100 ரூபாய் முதல் ஆரம்பமாகிறது. இதுவரை அஞ்சல் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறாத மக்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி எளிய முறையில் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்குகளைத் தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications