வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.. காணாமல் போன மீனவர்.. என்ன நடந்தது?
சென்னை : மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
இலங்கைக் கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவக் கப்பலை விரட்டிப் பிடிக்க முயற்சித்தபோது மூழ்கிப்போன கப்பலில் காணாமல் போன மீனவரை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு புதன்கிழமை கடிதம் எழுதினார்
அந்தக் கடிதத்தில், "கடந்த 18.10.2021 அன்று மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடிக் கப்பலை இலங்கை கடற்படையினர் துரத்தியபோது மூழ்கியது. அதிலிருந்து மூன்று மீனவர்களில் இரண்டு மீனவர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள ஒரு மீனவரை தேடும் பணி 18.10.2021 முதல் நடைபெற்று வருகிறது.

ஸ்டாலின் கடிதம்
மீட்கப்பட்ட இரண்டு மீனவர்களுக்கு மறுவாழ்வு அளித்திடவும், காணாமல் போன மீனவரை கண்டுபிடித்திடவும் உரிய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நீண்டகாலமாக தொடர்ந்து நிகழ்ந்து வருவதால் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" இவ்வாறுன வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

3 பேர் யார்யார்
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து திங்கள்கிழமை காலையில் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று 118 விசைப்படகுகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். இதில் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகில் ராஜ்கிரன், சுகந்தன், சேவியர் ஆகிய மூன்று மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

கைது செய்ய முயற்சி
இவர்கள் இலங்கை கோவளம் கடற்பகுதியில் திங்கள்கிழமை இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. .அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களை கைது செய்ய முயன்றனர். இதில் தமிழக மீன்பிடி விசைப்படகு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் மீது மோதியதில் மீன்பிடி விசைப்படகு நடுக்கடலில் முழ்கியதாக கூறப்படுகிறது.

ஒருவர் மாயம்
இதையடுத்து கடலில் தத்தளித்த சுகந்தன், சேவியர் ஆகிய இருவரை இலங்கை கடற்படையினர் மீட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று முதலுதவி அளித்து பின்னர் கைது செய்தனர். அவர்களுக்கு காயம் எதுவும் இல்லை. ஆனால் இலங்கை கடல் பகுதியில் படகு கவிழ்ந்த சம்பவத்தில் மூழ்கிய தமிழக மீனவர் ராஜ்கிரணின் சடலம் மிதப்பதாக தகவல் வெளியானது. அவருக்கு திருமணம் ஆகி 40 நாட்களே ஆகிறது. இந்நிலையில் விசாரித்த போது ராஜ்கிரண் சடலம் அங்கு இல்லை, அவர் உயிருடன் திரும்புவார் என உறவினர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

மீன் வளம் அச்சம்
தமிழக மீனவர்கள் இந்த காலக்கட்டத்திலும் நடுக்கடல் கைது சம்பவங்கள் தொடர்வதற்கு மீன்வளங்கள் குறையக்கூடும் என்ற இலங்கை மீனவர்களின் அச்சமே முதன்மையான காரணம் என்றும் கூறப்படுகிறது. இருநாட்டு மீனவர்களிடையே முன்பு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைப் போல மீண்டும் நடத்தி, அவர்களின் குறைகளைக் கேட்டு சுமுகமான தீர்வுகளை எட்ட வேண்டும். மத்திய அரசு இந்த விஷயத்தில் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது,












Click it and Unblock the Notifications