தீபாவளிக்கு வெடி வெடிக்க முடியுமா? வருணபகவான் வழிவிடுவாரா? - புவியரசன் சொன்ன நல்ல செய்தி
தீபாவளி பண்டிகைக்கு வெடி வெடிக்கும் வகையில் மழை விட்டு விட்டு பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.
சென்னை: தீபாவளி நாளில் மக்கள் பட்டாசு வெடிக்கும் வகையில் மழை விட்டு விட்டு பெய்யும் என்று வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார். வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வளி மண்டல மேலடுக்கு சுழற்சியாக வலுவிழக்கும் என்றும் புவியரசன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்றிரவு முதல் தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பெய்த பலத்த மழையால் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென்காசி, குமரி, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ராமநாதபுரம்,தூத்துக்குடி,நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது. விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை தென்காசி,நெல்லை,ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மதுரை, விருதுநகர், சிவகங்கை, கடலூர் டெல்டா மாவட்டங்களில் மழை நீடிக்கும். அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் புவியரசன் கூறினார்.
அப்போது செய்தியாளர்கள் சிலர் தீபாவளி நாளில் மழை பெய்யுமா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த புவியரசன், மக்கள் வெடி வெடிக்கும் வகையில் மழை விட்டு விட்டு பெய்யும் என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகை நாளில் மழை கொட்டித்தீர்க்கும். சிறுவர்கள் பலர் பட்டாசு வெடிக்க முடியாமல் ஏமாற்றமடைவார்கள். இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வர உள்ளதால் தமிழகத்தில் மழை நீடிக்கிறது. எனவேதான் தீபாவளி நாளில் மழையில் நனையாமல் வெடி வெடிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினர் செய்தியாளர்கள். அதற்கு பதிலளித்த புவியரசன், விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் தீபாவளி நாளில் வெடி வெடிக்கலாம் என்றும் கூறியுள்ளார் புவியரசன்.












Click it and Unblock the Notifications