மருத்துவமனையில் ஜெ. மயக்க நிலையில் இருந்தார்... ஜனாதிபதிக்கு வித்யாசாகர் ராவ் அனுப்பிய கடிதம் லீக்!
சென்னை : அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ஜெயலலிதாவை முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பார்த்தாரா என்ற உண்மையான தகவல்கள் வெளியாகியுள்ளன.
செப்டம்பர் 22, 2016ல் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக அதிமுக பொதுச்செயலாளராகவும், முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாதாரண காய்ச்சல் தான் 3 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டது. பின்னர் காய்ச்சல் சரியாகிவிட்டது மேலும் சில நாட்கள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உள்ளே என்ன நடக்கிறது உண்மை நிலை என்ன என்பது தெரியாமல் தொண்டர்கள் அல்லாடிப் போனார்கள். இந்நிலையில் தான் அப்போதைய தமிழக ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்துவிட்டு வந்தார். ஜெயலலிதாவை தூரத்தில் இருந்து பார்த்ததாக அப்போது அவர் கூறி இருந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதாவை மருத்துவமனையில் வித்யாசாகர் ராவ் சந்தித்தாரா என்று ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் கேள்வி எழுப்பி இருந்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் ஆளுநர் மாளிகைக்கும் மருத்துவமனைக்குமான தொடர்பு எப்படி இருந்தது. ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டதா என்பன உள்ளிட்ட 6 கேள்விகளை கடந்த 19ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு விசாரணை கமிஷன் அனுப்பி இருந்தது.
இதற்கு ஆளுநர் ஜனாதிபதிக்கு அக்டோபர் 6, 2016ல் அனுப்பிய கடிதத்தின் நகல் மற்றும் ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் டிசம்பர் 7, 2016ல் அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பிய கடிதத்தின் நகல்களோடு 6 கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 6ல் ஆளுநர் எழுதிய 3 பக்கங்கள் கொண்ட கடிதத்தில் ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்த போது அவர் மயக்க நிலையிலேயே இருந்தார் என்று வித்யாசாகர் ராவ் குறிப்பிட்டுள்ளார். ஆளுநரைப் பார்த்து ஜெயலலிதா கையசைத்தார் என்று அப்போது கூறுப்பட்ட நிலையில் தற்போது ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் வித்யாசாகர் ராவ் ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்ததாக குறிப்பிட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications