அரசு பங்களாக்களை காலி செய்த முன்னாள் அமைச்சர்கள்... விரைவில் குடியேறும் புதிய அமைச்சர்கள்..!
சென்னை: சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர்களுக்கான பங்களாக்களில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் தங்கள் உடைமைகளை எடுத்துச் செல்ல தொடங்கியுள்ளனர்.
சென்னையில் பசுமை வழிச்சாலை எனப்படும் கிரீன்வேஸ் ரோட்டில் அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு என 76 அரசு பங்களாக்கள் இருக்கின்றன. இந்த பங்களாக்களை பொதுப்பணித்துறையினர் நிர்வகித்து வருகின்றனர்.
எந்தவொரு மராமத்து பணிகளாக இருந்தாலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதனை உடனடியாக அரசு செலவில் சீரமைத்து கொடுப்பார்கள்.
சபாநாயகராக இன்று பதவியேற்கிறார் அப்பாவு... துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி பொறுப்பேற்கிறார்..!
சகல வசதிகள்
குறிஞ்சி, முல்லை, பொதிகை, வைகை, என ஒவ்வொரு பங்களாவுக்கு தனி தனிப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் பங்களாக்கள் ஒவ்வொன்றும் குறைந்தது 5,000 சதுர அடியிலாவது இருக்கும். பரந்து விரிந்து விசாலமான காற்றோட்டத்துடன் பங்களாக்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். மின்சாரம், குடிநீர், தொலைபேசி என சகல விதமான வசதிகளும் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும்.
பொதுப்பணித்துறை
இதில் சபாநாயகருக்கு ஒதுக்கப்படும் பங்களா மட்டும் ஒரு ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமானதாக இருக்கும். இப்படி பல வசதிகளை கொண்ட பங்களாக்களை காலி செய்ய யாருக்கு தான் மனம் வரும். இருப்பினும் வேறுவழியில்லாமல் பொதுப்பணித்துறை அறிவுறுத்தலை ஏற்று முன்னாள் அமைச்சர்கள் பலரும் இரவோடு இரவாக தங்கள் உடமைகளை அங்கிருந்து எடுத்துச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
விதிவிலக்கு
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மட்டும் இன்னும் தங்கள் பங்களாக்களை காலி செய்யவில்லை. எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தற்போது குடியிருக்கும் அரசு பங்களாவிலேயே எடப்பாடி பழனிசாமி தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், துணை முதலமைச்சராக இருந்ததால் பங்களாவை காலி செய்ய ஓ.பன்னீர்செல்வத்துக்கு மட்டும் 3 மாதம் காலஅவகாசம் தரப்படும் எனத் தெரிகிறது.
புதிய வண்ணம்
இதனிடையே முன்னாள் அமைச்சர்கள் காலி செய்துள்ள பங்களாக்களில் புதிய வண்ணம் பூசுதல் உள்ளிட்ட மராமத்து பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிவடைய உள்ள நிலையில் விரைவில் அங்கு புதிய அமைச்சர்கள் குடியேறவுள்ளார்கள். இதற்காக இப்போதே வீடு பார்க்கும் படலமும் தொடங்கியுள்ளது.